இன்று நாம் சந்திக்கின்ற சோதனைகள் அல்லது துன்பங்களெல்லாம் 3 வழிகளில் வருகிறது.
1. நாமே உருவாக்கிக் கொண்டது
“செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை”
- 1திமொத்தேயு 6:9
“ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர்”
- யாக்கோபு 1:14
2. மற்றவர்கள் நமக்கு கொடுப்பது
“ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது”
- சபை உரையாளர் 8:9
சாத்தான் யோபை சோதித்தல் - யோபு 1, 2 அதிகாரங்கள்
3. கடவுளிடமிருந்து வருகிறது (இது சோதனையல்ல பரிசோதனை)
“நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” – எசாயா 48:10
நமக்கு நாமே உருவாக்கி கொண்ட சோதனையாக இருக்கலாம் அல்லது மற்றவர்கள் நமக்கு கொடுக்கின்ற துன்பமாக இருக்கலாம் இவை இரண்டையும் வெல்லவதற்கான ஆற்றலை தருபவர் இறைவன். (“தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்” (எபிரேயர் 2:18)
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:11-13), இயேசு சோதிக்கப்படுகிறார். மனிதர் என்ற நிலையில் அவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். அடையாளம் கேட்டு பரிசேயர் அவரை சோதித்தனர். இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என்று சொல்லி அவர்கள் வாயை அடைத்துவிட்டார். சோதனை நீண்டு போகாமல் தடுத்துவிட்டார். அவர்கள் அடையாளம் கேட்டது நம்புவற்கு அல்ல, அதை இயேசு உணர்ந்ததால் அவ்வாறு சொன்னார்.
நற்செய்தி இவ்வாறு நிறைவுபெறுகிறது, “அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறுகரைக்குச் சென்றார்”. சோதனைகளை தகர்த்துவிட்டு, சோதிப்பவர்களை விட்டு விட்டு இயேசு மறுபகுதிக்குச் சென்றார்.
ஜான் பன்யன் சொல்வார், ‘சோதனைகளை முதலில் நாம் சந்திக்கும்போது, அவை சிம்சோன் சந்தித்த கர்ச்சிக்கும் சிங்கத்தை போன்று இருக்கும்; அதை நாம் வெற்றிக் கொண்டோம் என்றால் அதனுள் தேன் கூட்டை காணலாம்’. (காண்க - நீதித் தலைவர்கள் 14:8)
இயேசுவை போன்று துணிச்சலோடு சோதிப்பவர்களை எதிர்க்க வேண்டும். தேவையற்ற நேரங்களில் அவர்களை விட்டு ஒதுங்க வேண்டும்.
No comments:
Post a Comment