“எவரும் தன்னலம் நாடக்கூடாது; மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்” - 1 கொரிந்தியர் 10:24
தன்னைக் குறித்து கவலைக் கொள்கிறவர் கடவுளின் சீடராக இருக்க முடியாது. இயேசுவை பின்பற்ற விரும்புகிறவர் தன்னலம் துறந்து, அவரவர் சிலுவையை சுமந்துக் கொண்டு இயேசுவை பின்பற்ற வேண்டும் ((மத்தேயு 16:24).
இயேசுவைப் பின்பற்ற விரும்புபவர்கள் அதிகம். ஆனால் சிலுவைகளோடு பின்பற்ற விரும்புபவர்கள் குறைவு. “கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்” - 1பேதுரு 2:21
இங்கு பின்பற்றுதலும் தன்னலம் துறத்தலும் இணைந்து பயணிக்கிறது. தன்னிலை உணர்தலும் பிறர்நிலை கண்டு கொள்வதும் கடவுளின் விருப்பமே. தன்நிலையை உணர்ந்தால் இயேசுவை பின்பற்ற தயக்கம் இருக்காது. பிறர்நிலை கண்டு அவர்நிலை உயர உழைத்தால் அங்கு செய்யப்படும் நற்செயல் வாயிலாக இறைவன் அறிவிக்கப்படுகிறார்.
புனித பெனடிக்ட் சொல்வார், ‘நமக்கு நலமெனப்படுவதை (நம் நலனை) ஒருபோதும் நாம் பின்பற்ற கூடாது, மாறாக அடுத்தவரின் நலனையே கருத்தில் கொள்ள வேண்டும்’.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 9:22-25) இயேசு தன்னிலை துறப்பு (துன்பம், இறப்பு) பற்றியும் அதன் வாயிலாக பெறப்படும் மாட்சி (உயிர்ப்பு) பற்றியும் கூறுகிறார். உலகை பற்றிக்கொள்ள விரும்புவோர் தன்னை அறியாமலேயே தன் வாழ்வை இழந்துவிடுவர். இழக்க வேண்டியது வாழ்வை அல்ல தன்னலத்தை…
இயேசுவில் அன்பு கொண்டுள்ளோர் தன்னலம் நாடமாட்டார். “அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது” - 1 கொரிந்தியர் 13:5
தன்னலம் மறக்கப்படட்டும் பிறர்நிலை உயர்த்தப்படட்டும்
No comments:
Post a Comment