24_02

எது நற்செய்தி?


“கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்” - திருத்தூதர் பணிகள் 10:38

நன்மை + செய்தி = நற்செய்தி

நன்மை + செயல்  = நற்செயல்

இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்து கொண்டே சென்றார். நோயிலிருந்து விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, உளநோயிலிருந்து விடுதலை இதுதான் இயேசுவின் பணிவாழ்வு. தன்னுடைய பணிவாழ்வை தொடங்குவதற்கு முன் இயேசு பாலைநிலத்தில் தவம் (அ) தியானம் செய்தார். அந்த தியானத்தில் அவர் சாத்தானால் அதிகமாக சோதிக்கப்பட்டார். இதே நிகழ்வு புனித மத்தேயு நற்செய்தியிலும்(4:1-11) புனித லூக்கா நற்செய்தியிலும்(4:1-13) விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைகள் எல்லாம் அவருடைய தெய்வீகத் தன்மைக்கும் மனிதத் தன்மைக்கும் இடையேயான பரிசோதனை. சாத்தான் சொல்வதை செய்தால் சாத்தான் வெற்றி பெறுவான், இயேசு மனிதத் தன்மையில் பலவீனப்பட்டு போனார் என்றாகிவிடும். சாத்தான் சொல்கிற சவால்களில் பங்கெடுக்கவில்லையென்றால் இயேசுவின் தெய்வீகத் தன்மை நிரூபிக்கப்படாது.

இங்கு இயேசுவின் நோக்கம் சாத்தானுக்கு செவிமடுப்பதல்ல, சோதனைகளை முறியடிப்பது தான். அவர் சோதனைகளை முறியடிக்க பயன்படுத்திய கருவி இறைவார்த்தை. சாத்தானும் இறைவார்த்தையை மேற்கோள் காட்டியது. (“உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்” திபா 91:11). இயேசு நிலை தடுமாறவில்லை.

இயேசுவுக்கே சோதனை என்றால் நாம் எம்மாத்திரம். இங்கு சோதிக்கிறவர்களும் அதிகம்; சோதனைகளும் அதிகம். 

சோதிக்கப்படுவது நற்செய்தி ஆக முடியுமா? சோதனை நற்செயல் ஆக முடியுமா? நிச்சயம் இல்லை. ஆனால் சோதனைகளிலிருந்து வெளிவருபவர்கள் நிச்சயம் நற்செயல் புரிவார்கள்.

“தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்” - எபிரேயர் 2:18. இயேசு தாம் மனித நிலையில் சோதிக்கப்பட்டாலும் பாவம் செய்யவில்லை. சோதனைகளை எதிர்த்தார். அவர் நமக்கு உதவுவார்.

புனித பிரான்சிஸ் அசிசியார் சொல்வார், ‘எல்லா வேளையிலும் நற்செய்தியை அறிவி; தேவைப்பட்டால் வார்த்தையால் அறிவி’. அப்படியென்றால் வாழ்க்கையால் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய கருத்து.

பலர் சோதனைகளின் மத்தியிலும் நற்செய்தியை அறிவிக்கிறார்கள் (வாழ்க்கையால் அறிவிக்கிறார்கள்). சிலர் சோதனை வந்ததும் நற்செய்தியை மறுதலிக்கிறார்கள் (வாழ்க்கையை வெறுத்து விடுகிறார்கள்). 

“சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்” - யாக்கோபு 1:12.

முதல் வாசகத்தில், “மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது” (தொ.நூல் 9:11) என்று கடவுள் சொன்னாரே அது நற்செய்தி.

இறைவன் அழிவை விரும்புபவர் அல்ல; அழியா நிலைவாழ்வை கொடுக்கிறவர்.

இரண்டாம் வாசகத்தில், “அன்பிற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார்” (1பேதுரு 3:18) என்பது நற்செய்தி. 

இயேசுவின் இறப்பு ஒருவேளை அவரை எதிர்த்தவர்களுக்கு நற்செய்தியாக இருந்திருக்கலாம்... ஆனால் அவரை நம்புவோருக்கு அவர் வாழ்கிறார், நம் வழியாக (நற்கருணை, இறைவார்த்தை) செயலாற்றுகிறார் என்பதே அழியாத நற்செய்தி.

இயேசுவை பிரதிபலிக்க, நாம் வாழும் வாழ்க்கை தான் நற்செய்தி. மற்றவர் வாழ்வு பெற நம் வாழ்வு எனும் நற்செய்தி ஒளியாகட்டும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...