“ஆண்டவரின் நெறிமுறைகளை எண்ணிப்பார்; அவருடைய கட்டளைகளை எப்போதும் உள்ளத்தில் இருத்து. அவரே உன் உள்ளத்திற்குத் தெளிவூட்டுவார்; நீ விரும்பும் ஞானத்தை உனக்கு அருள்வார்” - சீராக்கின் ஞான நூல் 6:37
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை நெறிமுறை உண்டு. அவரவருக்கென்று தனிப்பட்ட பாதை உண்டு. என் விருப்பப்படி என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எனக்கு முழுசுதந்திரம் உண்டு. ஆனால் எனது வாழ்க்கை நெறி மற்றவர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது.
இங்கு நெறிபிறழ்ந்து வாழ்வோரும் உண்டு (எப்படியும் வாழலாம்), நெறிமுறைகளோடு வாழ்வோரும் உண்டு (சட்ட திட்டத்திற்கு உட்பட்டு). தாங்கள் நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் மற்றவர்கள் அதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் (அதிகாரம் செலுத்துதல்) என்று வலியுறுத்துவோரும் உண்டு.
இவ்வுலக தலைவர்கள் காட்டுகிற நெறிமுறைகள் எல்லாம், ஒருவரை உயர்த்தி பிடிக்கவும் மற்றொருவரை அடிமைப்படுத்தவும் பயன்படுகிறதே ஒழிய, சமத்துவ சமுதாயம் படைக்க உதவுவதில்லை.
அன்பு செய்வோரை மட்டுமல்ல பகைவரையும் அன்பு செய்ய, செயல்களில் மட்டும் தவறாமல் இருப்பதல்ல சொல்லிலும் தவறாமல் இருக்க (முட்டாளே, அறிவிலியே என்று சொல்லாதே), கடவுளோடு மட்டுமல்ல சக மனிதனோடும் நல்லுறவு கொள்ள (ஒப்புரவு செய்து கொள்ள) அழைப்பதே இயேசுவின் புதிய நெறி.
அடக்குமுறைகளை வழிவகுக்கும் அர்த்தமற்ற நெறிமுறைகளை (சடங்குகளை, சட்டங்களை) விலக்கி, இயேசுவின் புதிய நெறியை கருத்தில் கொள்வோம். புதிய நெறியில் மனிதம் தழைக்கட்டும்.
கேள்வி
1. கொலை செய்வதை விட ஒருவரை திட்டுவது பாவமா?
வார்த்தைகளால் ஒருவரை திட்ட ஆரம்பிப்பது தான், செயல்வழி கொலைக்கு ஒருவரை இழுத்து செல்கிறது. பேச்சு நீண்டு கொண்டே செல்வது கைகலப்புக்கு வழிவகுக்கும். (பேச்சில் ஆரம்பிப்பது பிரச்சனையில் முடிகிறது). எனவே கொலை செய்வற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சொற்களை பயன்படுத்துவதே பாவம் என்கிறார் இயேசு.
No comments:
Post a Comment