“இவரோ (ஏழைக் கைம்பெண்) தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” – மாற்கு 12:44
இந்த உலகில் பற்றாக்குறையில் இருப்பவர்கள் அதிகம் தான். ஆனால் பற்றாக்குறையில் இருப்பவர்கள் பற்றாக்குறையில் நீடித்து இருப்பதற்கு முக்கிய காரணம், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளாதது தான்.
ஒருபுறம் உணவு வீணாக்கப்படுகிறது, தேவையற்ற வழிகளில் உணர்வுகள் (காதல், கூடா நட்பு) சிதறடிக்கப்படுகின்றன. மறுபுறம் உணவு தேவைப்படுவோரும் அன்பு இல்லாமல் அனாதையாக வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:1-10) இயேசு தன் உணர்வை வெளிப்படுத்துகிறார். “அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்” (யோவான் 6:27) என்றவர், (தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதுதான் முதன்மை என்பதில் இயேசு தெளிவாக இருந்தார்) மக்களின் தளர்வை புரிந்துக் கொள்கிறார். ஆன்ம உணவை பெற்றவர்கள்மீது (இறைவார்த்தைக்கு செவிசாய்த்தவர்கள்மீது) பரிவு கொண்டு, உணவு பற்றாக்குறையை போக்க பகிர்வு மனப்பான்மையை உருவாக்குகிறார்.
இல்லாமையிலிருந்து உருவாக்கவில்லை இருப்பதிலிருந்து உருவாக்குகிறார் இயேசு. உணவும் உணர்வும் பகிரப்படும்போது குறைந்து போவதில்லை, நிறைவு பெறுகிறது. இவை இரண்டும் இருப்பவரோடு மேலும் பகிரப்படுகிறதா? அல்லது இல்லாதவரோடு பகிரப்படுகிறதா? என்பதில் தெளிவு தேவை.
‘மற்றவர்களை வரவேற்பதிலும் மற்றவர்களுக்கு உணவு அளிப்பதிலும் மற்றவர்களை ஆதரிப்பதிலும் நாம் தாராளமாக இருந்தோம் என்றால், ஒருபோதும் நாம் ஏழையாவதில்லை, மாறாக நமது வாழ்வு வளம்பெறும்’ என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்
பதுக்கல்கள் மறைய வேண்டும், பகிர்வுகள் பெறுக வேண்டும். அப்போது தான் நாம் இயேசுவோடு இணைந்து இறையாட்சியை கட்டியெழுப்ப கைக்கோர்க்க முடியும். (‘நன்மை செய்வது நமது மேலான கடமை’ – திருத்தந்தை பிரான்சிஸ்).
Super bro
ReplyDelete