24_02

சுதந்திரத்தை சரியாய்ப் பயன்படுத்த…

01.03.2024 - வெள்ளிக் கிழமை

“கடவுளே உங்களுள் செயலாற்றுகிறார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்” - பிலிப்பியர் 2:13

கடவுள் ஒவ்வொருவருக்கும் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். அதை சரியாக பயன்படுத்துவதும் தவறாக பயன்படுத்துவதும் அவரவர் கையில் உள்ளது. அதே வேளையில், தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் கடவுள் தந்திருக்கிறார். அவருடைய விருப்பம் என்பது எல்லாரும் எல்லாமும் பெற்று ஒன்றாய் வாழ வேண்டும் என்பதே. 

நான் எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் போது, மற்றவர்களை நான் அழிப்பதுபோல  தோன்றலாம், ஆனால் அழிவு எனக்கு தான் என்பதை உணர வேண்டும். சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும்போது நாம் கடவுளுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறோம்.

ஒருவர் தனக்குரியதை பெற்றுக் கொள்வதும், அடுத்தவருக்குரியதை அடுத்தவருக்கு கொடுப்பதும் தான் சமூக நீதி. அடுத்தவருக்குரியதை நான் எடுத்துக் கொள்ள நினைப்பது அக்கிரமச் செயல். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 21:33-43,45-46) தோட்ட உரிமையாளர் தனக்குரியதை பெற்று வர, தம் பணியாளர்களை தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாசை, மண்ணாசை கொண்டவர்களாய் இழிவான செயல்களை செய்தார்கள். கொலை செய்தார்கள், கல்லால் எறிந்தார்கள், அடித்தார்கள்… எனக்குரியது போதும் என்ற மனப்பாங்கு இல்லாதது தான் இதற்கு காரணம். இறந்தபிறகு நம்மை கல்லறை வரை சுமப்பதற்கே நான்கு பேர் தேவைப்படுகிறது. நாம் பதுக்கி வைத்தவைகளை யார் கொண்டு வந்து கொடுப்பார்?

கடவுள் யாருடைய சுதந்திரத்தையும் தடை செய்வதில்லை. (அவரே தொடக்கத்தில் மனிதரை உண்டாக்கினார்; தங்கள் விருப்புரிமையின்படி செயல்பட அவர்களை விட்டுவிட்டார்” - சீராக் 15:14)

ஆனால் தீங்கு செய்யும் தீயோரை தோட்ட உரிமையாளர் (கடவுள்) ஈவிரக்கமின்றி அழித்து விடுவார். நம்முடைய தேவைக்கு அதிகம் சேர்க்காமல் கடவுளுக்கு ஏற்ற முறையில் செயல்படுவோம். நாம் புறக்கணிக்கப்பட்ட கல் அல்ல… நாம் தான் மூலைக்கல்

(பொருள் - பழம் பறிக்கும் காலம் என்பது இறையாட்சியின் அறுவடை காலம். தலைவர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர் தந்தை கடவுள் அனுப்பிய பணியாளர்கள். கடவுளின் வார்த்தையை சொல்ல வந்த அவர்களை உலகினர் ஏற்றுக் கொள்ளாமல் துன்புறுத்தினார்கள். இறுதியில் அவர் தம் மகன் இயேசுவையும் அனுப்பினார். அவரையும் கொலை செய்தார்கள்.)


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...