24_02

நம்புவதற்கு அடையாளம் தேவையா?

 


“நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்; என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்; ஏனெனில் ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணை செய்து ஆறுதல் அளித்துள்ளீர்” - திருப்பாடல்கள் 86:17

ஒருவர் நம்பிக்கைக்குரியவரா என்பதை கண்டு கொள்ள சில அடையாளங்கள் தேவைப்படுகிறது. முன் பின் தெரியாத ஒரு மனிதரை நம்பி ஒரு செயலை செய்வதற்கு தயக்கம் வருகிறது. ஆனால் நம்பிக்கை இல்லாமல் நம் வாழ்க்கை இயங்காது. (“நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்” - யூதா 1:22)

நிச்சயமாக, நம்பிக்கை இழந்தோருக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது நம் கடமை. ஆனால் நம்ப மறுப்போரை என்ன செய்வது?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:29-32) இயேசு செய்த அனைத்து வல்ல செயல்களையும் அரும்அடையாளங்களையும் கண்ட பிறகும், ஒரு கூட்டம் நம்புவதற்கு இன்னும் அடையாளம் கேட்கிறது. அவர் செய்த அரும்அடையாளங்கள் தான் எத்தனை! இயேசு சாலமோனை விட, யோனாவை விட பெரியவராக இருந்தும், அவர்களை ஏற்றுக் கொள்வதை போல கூட அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.

தங்களை முதன்மைப்படுத்திக் கொள்பவர்கள் மற்றவர்களின் உயர்நிலையை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. மற்றவர்களை நம்புவதுமில்லை.

‘முழுமையான படிக்கட்டுகளை (பாதைகளை) காணாதபோதும், முதல் அடி எடுத்து வைப்பதுதான் நம்பிக்கை’ என்பார் மார்ட்டின் லூத்தர் கிங்.

நினிவே மக்கள் மனம்மாற இறைவாக்கினர் யோனா வழியாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் அடையாளம் கேட்டு யோனாவை சோதிக்கவில்லை. மாறாக, கடவுளை நோக்கி மன்றாடினார்கள்,  தீய வழிகளினின்று விலகினார்கள், அவர்கள் செய்து வந்த கொடுஞ்செயல்களை விட்டுவிலகினார்கள். அவர்களுடைய நம்பிக்கை நிறைந்த வாழ்வு அவர்களை  அழிவிலிருந்து மீட்டது..

நினிவே மக்களின் வாழ்வு சுட்டுகிற பாடம், நம்புவதற்கு அடையாளம் தேவையில்லை என்பதே… ஒருவரின் நம்பிக்கை நிறைந்த வாழ்வு, மற்றொருவர் தனது வாழ்வில் நம்பிக்கை பெறுவதற்கான அடையாளம் (வழி).

 நம்புவோம்… வாழ்வு பெறுவோம்…

 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...