“பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்” - ஒசேயா 11:4
வாழ்க்கையில் இடர்களும் துயர்களும் வருவது யதார்த்தம். அந்த இடர்களிலும் துயர்களிலும் வாழ பழகிக் கொள்ள அல்ல, அதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். அந்த இடர்களினின்று மீண்டு வர நமக்கு உதவுவது தான் ஒருவர் நமக்கு காட்டும் பரிவு. பரிவுமிக்கவர் பிறரின் பாரம் குறைப்பார். தன்னலம் பாராது பிறர்நலம் பேணுவார்.
‘பரிவு என்பது பிறரை நம்மை விட தாழ்ந்தவராகவோ அல்லது நம்மை உயர்ந்தவராகவோ மதிப்பிடுவது அல்ல. மாறாக நம்மை போல பிறரையும் எண்ணுவது’ என்பார் திமொத்தி மில்லர். (“உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” – மத்தேயு 19:19) ஏனென்றால் பரிவில் சுழல்கிறது பார் (உலகம்).
மற்றவர்களை, நான் என்னை போல் நினைக்கும்போது, அவர்களது துன்பத்தில் தூர தள்ளி நிற்க மாட்டேன்; மாறாக அவர்களது துயரத்தில் பங்குக்கொள்வேன்.
இயேசு தன் பணிவாழ்வில் இலக்காக கொண்டிருந்ததே துயரில் துணைநிற்பதும், துயரை துடைப்பதும் தான். அதுதான் அவரது பரிவிரக்க செயல்கள். (“அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்” – மாற்கு 6:34).
சீராக்கின் ஞான நூல் (5:5) சொல்வதுபோல “ஆண்டவரின் பரிவு எல்லையற்றது”. பரிவை அவர் பகிர்ந்தளித்தார். தந்தை கடவுளின் அன்பை உலகறிய செய்தார். இரக்கச் செயல்கள் இயங்கும் செயல்களாக மாறும்போது இவ்வுலகம் புத்துணர்ச்சி பெறும். இவ்வுலகம் புத்துணர்ச்சி பெற, எப்போது நாம் பரிவை பகிரப் போகிறோம்?
No comments:
Post a Comment