“என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? – யாக்கோபு 2:14
ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கை சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் வெளிப்பட வேண்டும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நலம்பெற காரணமாய் இருந்தது, நலமளிப்பவரின் ஆற்றலும் நலம்பெறுபவரின் நம்பிக்கையும் தான். (“உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்” – மாற்கு 6:5,6). இயேசு வல்ல செயல் செய்ய, உதவி நாடிநின்றவர்களின் நம்பிக்கை தேவைப்பட்டது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதில் நம்பிக்கை முதிர்ச்சி பெறுவதில்லை. இறைவன் என்னை நினைக்க (எனக்கானதை செய்ய) நான் என்ன செய்ய வேண்டும் என்பதே நம்பிக்கையின் முதிர்ச்சி.
கிரேக்கப் பெண்ணின் நம்பிக்கை இயேசுவின் கவனத்தை ஈர்த்தது. இங்கு நம்பிக்கை சிறுமைப்படுத்தப்படவில்லை மாறாக பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது. நாய்களுக்கு போடுவது முறையல்ல என்றதும் மனம் சோரவில்லை அந்த பெண்(தாய்). நம்பிக்கையில் இன்னும் ஆழப்பட்டவாறு அவருடன் உரையாடுகிறார், தேவையானதை பெற்றுக் கொள்கிறார். (“எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது” – திருப்பாடல்கள் 9:18).
காலில் விழுந்து கேட்டதால் அல்ல மாறாக, நம்பிக்கை குறைவில்லாமல் கேட்டதால் அவர் மகளிடமிருந்து பேய் நீங்கியது.
‘நம்பிக்கை இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை, நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே’ என்பார் கல்வியலாளர் மேரி மெக்லியொட் பெத்யூன்.
நாம் பெருமைப்படுத்தப்படுவது நாம் இறைவனில் வைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையினால்தான். நம்புவோம்… நல்லதை பெறுவோம்…
No comments:
Post a Comment