24_02

கடவுளை மறக்க செய்யும் பதவிவெறி

28.02.2024 - புதன் கிழமை

“உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய்” - இணைச் சட்டம் 32:18

வாழ்க்கைக்கு அருள் தேவையா? பதவி தேவையா? என்றால் பதவியே தேவை என்கிறது மனித இதயம். மனிதர் தரும் அற்ப புகழுக்காக அருளை இழக்க மனம் துணிந்து விடுகிறது. கடவுளுக்காக என்று சொல்லி பதவிப் பிரமாணம் செய்யப்படுகிறது. இறுதியில் கடவுள் மறக்கடிக்கப்படுகிறார். தற்பெருமை தலை தூக்குகிறது. 

(தனக்கு பிடித்தவர்கள் பதவியில் இருந்து தவறே செய்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறது மனம். தனக்கு பிடிக்காதவர்கள் பதவியில் இருந்து நல்லதே செய்தாலும் அது நம் கண்களுக்கு தவறாக தான் தெரிகிறது. இங்கு கோபமும் பொறாமையும் தலை தூக்குகிறது.)

பதவிவெறி, கோபம், பொறாமை ஆகிய எல்லாவற்றையும் கடவுள் புறக்கணிக்கிறார். இவைகள் கடவுளை விட்டு நம்மை நகர்த்தும் பிரிவினைக் கருவிகள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 20:17-28) பதவி வெறியோடு வந்தவர்களின் மனதை பக்குவப்படுத்துகிறார் இயேசு. கோபம் கொண்ட 10 பேருக்கும் தலைமைத்துவத்தை புரிய வைக்கிறார். இயேசுவோடு உடன் இருந்தவர்களே இத்தகைய (பதவிவெறியை) எண்ணத்தை கொண்டிருந்தார்கள் என்றால் நாம் எம்மாத்திரம் என்று சமாதானப்படுத்திக் கொள்ள தோணுகிறது. (இது நம்மை நியாயப்படுத்தும் வார்த்தைகள்)

தலைவர்கள் கொண்டிருக்கிற அதிகாரம் (பதவி) மற்றவர்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மற்றவர்களுக்கு தொண்டு ஆற்றவே என்பதை இயேசு உணர வைக்கிறார். இங்கு ஒருவர் பெரியவர் என்ற நிலையை அடைய, அவர் தன்னை தாழ்த்த வேண்டும் என்பதே இயேசுவின் பாடம். அதற்கு இயேசு முன் உதாரணம். 

“கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” - பிலிப்பியர் 2:6-8

புனித அன்னை தெரசா சொல்வார், ‘பணிவோடு நடந்து கொள்ளும்போது, அடுத்தவர் நமக்கு கொடுக்கும் புகழ்ச்சியோ அல்லது இகழ்ச்சியோ நம்மை ஒருபோதும் தீண்டாது. பணிவோடு நடக்கும்போது தான், நாம் யாரென்று நமக்கு தெரியும்.

நமக்கு தலைமைத்துவத்தில் பதவிவெறி தேவையில்லை, பணிவே அவசியம்.

 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...