இரக்கமுடையவர்கள் எளியோரை, தேவையில் இருப்போரை கண்டு இறங்கி வருவார். இறங்கி வருவோரை இறைவன் இரக்கத்தோடு நோக்குவார். இங்கு ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு பற்றாக்குறை ஒரு காரணமல்ல… பகிராக்குறையே ஒரு காரணம்… பகிரப்பட வேண்டியது பொருளாகவோ, பணமாகவோ, ஆறுதலாகவோ இருக்கலாம்.
புனித அன்னை தெரசா சொல்வார், ‘இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 16:19-31) செல்வர் ஏழைக்கு எந்த தீங்கும் செய்யவில்லை, அதே வேளையில் இரக்கமும் காட்டவில்லை, எந்த நன்மையும் செய்யவில்லை. (“நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்” - யாக்கோபு 4:17).
இறந்தநிலையில் இரக்கத்திற்காக செல்வந்தர் ஆபிரகாமிடம் வேண்டுவது போல, இன்றைய நற்செய்தி வாசகம் கொடுக்கப்பட்டுள்ளது. இறப்பிற்கு பின் என்னவாகும் என்பதை இந்நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது (இரக்கம் காட்டாதோருக்கு கொடிய தண்டனை). உயிரோடு இருந்தபோது தன் வீட்டு வாயில் அருகே கிடந்த ஏழை இலாசருக்கு இரக்கம் காட்டாதவர், இறந்தபிறகு தன் சகோதரர்கள்மீது இரக்கம் கொள்கிறார்.
சிலர் இவ்வாறு எண்ணிக் கொள்கின்றனர், கடைசியில உள்ளத கடைசியில பார்த்துக்கலாம் என்று. எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளாவிடில் பெரும் இழப்பு உண்டு என்பதை மறந்துவிட கூடாது.
இந்த உலகில் இரண்டு வகையான ஏழைகள் இருக்கின்றனர், 1. எல்லாம் இருந்தும் அதை மறைத்து தன்னை ஏழை போல காட்டிக் கொள்வோர் 2. எதுவும் இல்லாத ஏழை
சிலர் தர்மம் எடுப்பதை தொழிலாக செய்கின்றனர். அதிலே இன்பம் காண்கின்றனர். இவர்கள் ஒருபோதும் நிறைவு அடைவதில்லை. நாம் உதவ வேண்டியது எதுவும் இல்லாத ஏழைக்கே. உண்மையில் தேவையில் இருப்போர் பிறரிடம் உதவி கேட்பதற்கே கூச்சப்படுவர். வாய் திறந்து கேட்க முடியாத நிலையில் இருப்பர். நாம் இத்தகைய வருந்தும் எளியோருக்கு இரக்கம் காட்ட வேண்டும்.
இரக்கமுடையோர் மட்டுமல்ல, இன்னலை அனுபவித்தோரும் மறுமையில் இரக்கம் பெறுவர். ஆனால் யாக்கோபு திருமுகம் 2:13இல் சொல்லப்பட்டுள்ளது போல, “இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்” -
போகும்போது எதையும் கொண்டு போக போவதில்லை, முடிந்தவரை இரக்கச் செயல்களை செய்துவிட்டாவது செல்வோம்.
No comments:
Post a Comment