24_02

தூசியும் சாம்பலுமான நாம்…

“அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது” - திருப்பாடல்கள் 103:14

மனிதர் அனைவரும் தூசியும் சாம்பலுமே ஆவர். தாம் எந்த நிலையிலிருந்து வந்தோம் என்பதை உணராத மனிதர்கள் தங்களை கடவுளாகவே எண்ணிக் கொள்கிறார்கள். தன்னை உயர்த்தி மற்றவர்களை தன் காலடியில் வைக்க நினைக்கும் கொடூர எண்ணம் கொண்டவர்கள் அதிகம் தான். 

தவக்காலத்தில் நுழைய இருக்கிறோம். நோன்புகள் ஏற்கவும் தவறுகளுக்கு மனம் வருந்தவும் புதிய வாழ்வு வாழவும் அழைப்பு விடுக்கிறது சாம்பல் புதன். சாம்பலை பூசுவதோடு எல்லாம் முடிவடைவதில்லை. சாம்பல் பூசிக் கொள்வதும் சாக்கு உடை உடுத்துவதும் நோன்பின் வெளிஅடையாளங்கள். அதையும் கடந்த சில வெளிப்புற அடையாளங்கள்  நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. 

இறைவாக்கினர் எசாயா நூல் 58: 6-7இல் “கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!” என்று காண்கிறோம். 

இவை தான் இறைவன் எதிர்பார்க்கிற நோன்பு! ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையை உணர்ந்து பார்த்து செயல்பட்டாலே இவ்வுலகம் விண்ணகமாய் மாறும்.

நம் நிலை என்ன ?

- “உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே!” - திருப்பாடல்கள் 39:11

- “மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளி பூவே!” - எசாயா 40:6

- “புழுவைப்போன்ற  மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!” - யோபு 25:6

- “மானிடரின் எண்ணங்கள் வீணானவை; இதனை ஆண்டவர் அறிவார்” - திருப்பாடல்கள் 94:11

- “மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்கள்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை” - திருப்பாடல்கள் 144:4

இத்தகைய நிலையில் இருக்க கூடிய நாம் பெருமைப் பாராட்டலாமா? நம்மை முதன்மைப்படுத்தலாமா? (கொண்டு வந்தது என்ன? கொண்டு போவது என்ன?)

புனித அகுஸ்தினார் சொல்வார், ‘உனது வேண்டல்கள் கடவுளை நோக்கி எழுப்பப்பட வேண்டுமா? இரண்டு காரியங்களை செய்; ஒன்று உண்ணா நோன்பு, மற்றொன்று உதவி’.

நோன்பின் சில அடிப்படைக் கூறுகள்

- பிறரின் நல்வாழ்வை முன்னிலைப்படுத்த வேண்டும்

- விரும்பாததை துறப்பதல்ல விரும்புவதை துறக்க வேண்டும்

- 40 நாட்களுக்கு மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்

எளிதானதை செய்வதல்ல நோன்பு, எளியவரை இல்லாதவரை தாங்குவது தான் நோன்பு. நம் நிலை உணர்ந்து நம்மாலான உதவியை செய்வோம். தொடரட்டும் தவக்காலத்தின் ஒறுத்தல்களும் நற்செயல்களும் வாழ்நாள் முழுவதும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...