நலமாக இருக்கக்கூடியவருக்கு எந்த மருத்துவரும் தேவையில்லை எந்த மருந்தும் தேவையில்லை. மனதளவிலும் உடலளவிலும் நோயுற்று வலுவற்று இருக்கக்கூடியவருக்கு தான் மருத்துவரும் மருத்துவமும் தேவை. காயங்கள் இருக்கக்கூடிய இடத்தில் மருந்திடும் போது அந்த காயங்கள் ஆறி விடுகின்றன. அந்த மருந்து வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால் அங்கு ஒரு குறைபாடு உள்ள இடம் தேவைப்படுகிறது. குறைபாடுள்ள இடத்தில் தான் வலிமையான சக்தி உள்ள அந்த மருந்து வேலை செய்ய முடிகின்றது.
அதே போலவே அருள் இருக்கக்கூடிய இடத்தில் வல்லமை தேவையில்லை, ஏனென்றால் அங்கு அருள் நிரம்பி வழிகிறது. எங்கு ஒரு ஆன்மா வலுவற்று மாசுள்ளதாக இருக்கிறதோ அங்கே அந்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்கான கடவுளின் அருள், வல்லமை தேவைப்படுகிறது.
"எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்" (2 கொரிந்தியர் 12:7-9).
இங்கு திருத்தூதர் பவுல் தன்னை ஒரு முள் குத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார். அதை நீக்கிவிடுமாறு வருந்தி கேட்டுக் கொள்கிறார். ஆனால் ஆண்டவர் என் அருள் உனக்கு போதும் என்று சொல்கிறார். உன்னுடைய வலுவின்மையில் தான் என்னுடைய வல்லமை வெளிப்படும் என்பதை அவர் தெளிவுப்படுத்துகிறார். வலுவற்ற நிலையில் திருத்தூதர் பவுல் இருக்க வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பம் அல்ல, மாறாக அவர் தன்னுடைய நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும், அந்த நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது கடவுள் விருப்பம்.
"ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்" (எபிரேயர் 4:15). கடவுளால் நம்முடைய வலுவற்ற நிலையை மாற்ற முடியாது என்று இல்லை. நம்மை போலவே இயேசு சோதிக்கப்பட்டார், இருந்தபோதிலும் பாவம் செய்யாமல் இருந்தார். மனித நிலையில் இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய சுயநலன்களினால் அல்லது மற்றவர்களுடைய ஆதிக்கத்தினால் துன்புறும்போது, வலுவை இழந்து காணப்படும்போது கடவுள் நம்மீது பரிவு கொள்கிறார். ஏனென்றால் இயேசு பாவம் தவிர அனைத்திலும் மனிதரைப் போல் இருந்தார் என்கிறது விவிலியம்.
இயேசு தன்னுடைய பணி வாழ்வில் பாவிகள் என்று புறம் தள்ளப்பட்டவர்கள் மீது பரிவு கொண்டார். அவர்களை தேடி சென்றார் நோயாளர்களை தொட்டார். தீட்டு என்று கருதப்பட்டவர்களையும் தொட்டு குணமாக்கினார்.
வலுவுள்ள நிலையில் இருக்கக்கூடிய நாம் வலுவற்றவர்களை இயேசுவை போல தேடிச் செல்ல வேண்டும். தொட வேண்டும், ஆறுதல் கூற வேண்டும்...
No comments:
Post a Comment