“குருக்கள், “ஆண்டவர் எங்கே?” என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்” - எரேமியா 2:8
இன்றைய நாகரீக காலத்தில் இயேசுவை பின்பற்றுவதை விட்டுவிட்டு இயேசுவின் வார்த்தையை போதிப்பவர்களை பின்பற்ற, பற்றிக்கொள்ள ஒரு கூட்டம் ஓடிக்கொண்டே இருக்கிறது. (போதகர்களின் ரசிகர்கள்)
பல வேளைகளில் இயேசுவினுடைய வார்த்தைகளை அறிவிக்க இங்கு போட்டி இல்லை. யார் சிறந்த போதகர் என்பதை காட்டிக் கொள்ளவே இங்கு போட்டி நடைபெறுகிறது. போதிப்பவரும் போதனையை பின்பற்ற வேண்டும் போதனையை கேட்போரும் பின்பற்ற வேண்டும். (திருமுழுக்கு பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் வார்த்தையை போதிக்க அழைக்கப்பட்டவர்கள்).
பிரான்சிஸ் டி சலேஸ் சொல்வார், 'நல்ல மறையுரை என்பது இறைவார்த்தை (மறையுரை) எவ்வளவு அருமையாக இருந்தது என்று மக்கள் கூட்டத்தால் பாராட்டப்படுவது அல்ல; மாறாக, இந்த மறையுரையை கேட்டதிலிருந்து என்னை மாற்றிக் கொள்வேன் அல்லது இறைவார்த்தையை வாழ்வாக்குவேன் என ஒருவரை உணர வைப்பதுதான்'.
சில இடங்களில் போதனை வேறு போதிப்பவர் வேறு. சில இடங்களில் போதிப்பவர் வாழ்வே சிறந்த போதனை தான். நம் வாழ்வுக்கு போதனை தான் தேவை. யார் போதிக்கிறார் என்பது முக்கியமல்ல.
அவர்கள் சொல்வது போல நடங்கள், அவர்கள் செய்வது போல ஒருபோதும் செய்யாதீர்கள் என்று அன்றே இயேசு சொல்லிவிட்டார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23: 1-12) மக்களுக்கு கடவுளின் சட்டத்தை எடுத்துச் சொல்கிற நிலையில் இருக்கக்கூடியவர்கள் பற்றி இயேசு கூறுகிறார். கையால் எதையும் அசைத்துக் கூட பார்க்காதவர்கள் தங்களுடைய நாவால் மற்றவர்களை அசைக்கிறார்கள். இயேசுவின் காலத்தில் மோசேயின் அதிகாரத்தை கொண்டிருந்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மக்களை சட்டங்களினால் வாட்டி வதக்கினார்கள். வலுவான சுமத்தற்கரிய சுமைகளை மக்கள் மீது திணித்தார்கள். கடவுளை அல்ல தங்களை அவர்கள் முதன்மைப்படுத்திக் கொண்டார்கள். இத்தகைய செயல்களை எல்லாம், கண்ணுற்ற இயேசு அவர்களை வன்மையாக கண்டித்தார்.
மதிப்பு என்பது நம்முடைய செயல்பாடுகளை வைத்து நமக்கு கொடுக்கப்பட வேண்டுமே தவிர, நாம் அதைக் கேட்டு வாங்க கூடாது. மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மக்கள் தங்களை மதிக்க வேண்டும், பொது இடங்களில் வணக்கம் செலுத்த வேண்டும் என்று எண்ணினார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் மைய சிந்தனை அல்லது போதனை என்பது 'நாம் நம்மை தாழ்த்திக் கொள்ள வேண்டும்'. இதுதான் இயேசுவின் போதனை. இதை இயேசு தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தார். நாமும் அந்த போதனையை வாழ்வாக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
No comments:
Post a Comment