15.06.2024 - சனிக் கிழமை
"கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு" - இணைச் சட்டம் 18:13
சொன்ன பொய்யை கூட உண்மை என்று சத்தியம் செய்வோரும் உண்டு. சொன்னது உண்மையாய் இருந்தும் அமைதி காப்போரும் உண்டு.
தான் சொன்னது பொய் என்பது வெளியே தெரிந்துவிட்டால், தன் மானம் போய்விடும் என்பதால் மற்றவரை அதட்டி தன் தன்மானத்தை காக்கும் வீரர்களும்(வீரர் என்று எண்ணி கொள்வோரும்) உண்டு.
எது வீரம்? உண்மையாய் இருப்பதே வீரம். ஏமாற்றுவதும், பொய் சொல்வதும், பித்தலாட்டம் செய்வதும் வீரமல்ல.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:33-37) ஆணையிடவே வேண்டாம் விண்ணுலகின் மீதும் மண்ணுலகின் மீதும் ஆணையிட வேண்டாம், நீங்கள் பேசும் போது ஆம் என்றால் ஆம் எனவும், இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள் என்கிறார் இயேசு.
மிகுதியான பேச்சு மிகுதியான பிரச்சனையை கொண்டு வரும். சில நேரங்களில் சில நல்லவர்களின் மௌனம் கூட பிரச்சனையை அதிகப்படுத்தி விடுகிறது. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். பேச தேவையற்ற இடத்தில் மௌனம் காக்க வேண்டும்.
ஆம் என்று சொல்ல வேண்டிய இடத்தில் ஆம் எனவும், இல்லை என்று சொல்ல வேண்டிய இடத்தில் இல்லை என்றும் சொல்ல பழகிக் கொள்ள வேண்டும்.
நமக்கு ஏன் வம்பு? நமக்கு ஏன் பிரச்சனை? என்று ஒதுங்கிக் கொள்வதனால் நாம் ஒருபோதும் நல்லவர்களாக மாறிவிட முடியாது.
(ஆனால் சில இடங்களில் ஒரு தடவை, இரண்டு தடவை சொல்லிவிட்டு அமைதியாய் இருப்பதும் நல்லது தான். காரணம் - புரிந்து கொள்ளாத மனநிலையில் இருப்பவரிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லினாலும் அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை).
சரியாய் உள்ளதை சரியென்றும் தவறாய் உள்ளதை தவறென்றும் சொல்வோம். மனிதர்களிடம் நல்ல பெயர் எடுத்து நாம் ஒன்றையும் சாதித்து விடப் போவதில்லை.
சத்தியம் செய்தல், ஆணையிடுதல் இனி வேண்டாம். தவறு செய்தால் தவறை ஏற்றுக் கொள்வோம், நல்லது செய்தால் பாராட்டைப் பெற்றுக் கொள்வோம்.
பொய்க்கு உண்மை என்னும் முலாம் பூசாமல் இருப்போம்...
No comments:
Post a Comment