05.06.2024 - புதன் கிழமை
"நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே" - சபை உரையாளர் 7:29
சரியான புரிதல் இல்லாமையினால் பிரச்சினைகள் வாழ்வில் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. புரிதலும் தெளிவும் இல்லாத வாழ்க்கை புதை மணலை போன்றது.
புரிந்துக் கொள்ள இயலாதவர்கள் பற்றி ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் புரிந்துக் கொள்ளும் தன்மை இருந்தும் நடிப்பவர்கள் பிரச்சினைக்கு உரியவர்களே.
எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை மனிதனின் வாழ்க்கைச் சிக்கலுக்கு காரணமாக அமைகிறது. ஆனால் அங்கு சரியான புரிதல் (தெளிவு) இல்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:18-27) சதுசேயரின் புரிந்துக் கொள்ளாத தன்மையையும் இயேசுவோடு வாதிடும் தன்மையையும் பார்க்க முடிகிறது. இறப்பிற்கு பிறகு திருமணம் முடித்தவர்கள் எத்தகைய நிலையில் இருப்பர் என்பது அவர்களின் சந்தேகம்.
இறப்பிற்கு பின் வாழ்வு உண்டு, ஆனால் அது திருமண பந்தத்தினால் இணைந்த வாழ்வு அல்ல, மாறாக இறைவனோடு இரண்டறக் கலந்த விண்ணக வாழ்வு.
விண்ணக வாழ்வில் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை.
கடவுள் இறந்தோரின் கடவுளாக அல்ல, மாறாக வாழ்வோரின் கடவுளாக இருப்பார் என்கிறார் இயேசு.
இந்த சதுசேயர்களைப் போல, நாமும் பல குழப்பங்களை வாழ்வில் ஏற்படுத்துகிறோம். எல்லா குழப்பங்களுக்கும் காரணமாய் நாம் இருந்துவிட்டு, மற்றவர் மேல் பழி சுமத்தி விடுகின்றோம்.
குடும்ப உறவுகளில், குழும வாழ்க்கையில் சரியான புரிதலை கொண்டிருப்போம்.
சரியான புரிதல் தான் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
நற்செய்திப் பின்னணி
இன்றைய நற்செய்தி வாசகத்தில், சதுசேயர் மோசேயின் சட்டத்தை தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றனர். இணைச்சட்ட நூல் அதிகாரம் 25 வசனங்கள் 5 முதல் 10 வரை உள்ள பகுதியில் இறந்த சகோதரனுக்கு செய்ய வேண்டிய கடமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. (அண்ணன் இறந்து விட்டால், அவனுடைய வழி மரபை உருவாக்க வேண்டியது தம்பியினுடைய கடமை).
இதைத் தெரிந்து வைத்த சதுசேயர்கள் விடுதலைப் பயண நூல் 3:6இல் சொல்லப்பட்ட "கடவுள், இறந்தோரின் கடவுளல்ல மாறாக, வாழ்வோரின் கடவுள் என்பதை உணராமல் போய்விட்டார்கள்.
தொடக்க நூலைப் பொறுத்தவரை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோர் இறந்துவிட்டனர். ஆனால் கடவுளின் பார்வையில் அவர்கள் விண்ணக பேரின்ப வீட்டுக்கு உரியவர்களாய் இருப்பதினால் அவர்(கடவுள்) அவர்களின் (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) பெயரைச் சொல்லி, நான் இத்தகையோரின் கடவுள், அதாவது வாழ்வோரின் கடவுள் என்கிறார்.
No comments:
Post a Comment