24_06

தூண் துரும்பாகிறது... துரும்பு தூணாகிறது...

29.06.2024 - சனிக் கிழமை

திருத்தூதர்களான புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழா

இன்று திருத்தூதர்களும் திருஅவையின் இரு பெரும் தூண்களுமான புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் பெருவிழாவை தாய்த் திருஅவை கொண்டாடி மகிழ்கின்றது.

புனித பேதுரு (இராயப்பர்) யோவானின் மகனாக, கெனசரேத் ஏரிக்கரையின் பெத்சாயிதா ஊரில், சீமோன் என்ற பெயர் தாங்கிப் பிறந்தவர், புனித அந்திரேயாவின் சகோதரர். இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கியபோது, இவர் கப்பர்நாகூமிற்கு குடிபெயர்ந்திருந்தார். அலெக்சாந்திரியாவின் கிளமென்டின் எழுத்துக்களின்படி பார்த்தால், புனித பேதுரு எனும் சீமோனுக்கு, திருமணம் ஆகி, குழந்தைகளும் இருந்தன. இவர் மனைவி, மறைசாட்சியாக உயிரிழந்தார் எனவும் அறிகிறோம்.

புனித பேதுருவை, இயேசுவுக்கு, அல்லது, இயேசுவை, புனித பேதுருவுக்கு, அறிமுகப்படுத்தி வைப்பவர் அவரின் சகோதரர் புனித அந்திரேயா தான். முதல் பார்வையிலேயே புனித பேதுருவின் தனித்தன்மையை இயேசு புரிந்துகொள்கிறார். பாறை எனும் பொருள்படும்படியாக, தன் தாய்மொழியான அரமேயு மொழியில், ‘கேபா’ என புதுப்பெயர் சூட்டுகிறார் இயேசு.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, புனித பேதுரு, கி.பி.67 அல்லது 68ம் ஆண்டில், அதாவது, மன்னர் நீரோவின் ஆட்சிக் காலத்தில், 13 அல்லது 14வது ஆண்டில், தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார்.

புனித பவுல் (சின்னப்பர்) கிறிஸ்துவை கண்டுணர்ந்த புனிதராவார். இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் கி.பி. 9 தொடக்கம் 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டினத்தைச் சேர்ந்த உரோமை குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவர்களைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

தமஸ்கு நகர் செல்லும் வழியில் கிறிஸ்துவால் தடுத்து நிறுத்தப்பட்டு, கிறிஸ்துவின் தனிப்பட்ட பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர். சவுல் என்னும் பெயரை துறந்து பவுலாக மாறியவர். கிறிஸ்துவுக்காக பல்வேறு துன்பங்களை தாங்கிக் கொண்டவர். கிறிஸ்துவின் திருத்தூதனாக மாறி பல்வேறு இடங்களுக்கு சென்று நற்செய்தி பணியாற்றியவர். குறிப்பாக புறஇனத்து மக்களுக்கு கிறிஸ்துவை எடுத்து சொன்னவர்.

கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் தனது உயிரையே தியாகம் செய்தவர் திருத்தூதர் பவுல்.

இருவருக்குள்ளும் பல ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் இருக்கின்றன. 

திருத்தூதர் பேதுரு சாதாரண எளிய குடும்பப் பின்னணியை கொண்டவர், படிப்பறிவற்றவர், இயேசுவால் திருத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இயேசுவோடு இருந்தபோது இயேசுவை முழுமையாக அறிந்து கொண்டிராதவர், எதிலும் அவசரப்படுபவர், துணிச்சல் மிக்கவர்...

திருத்தூதர்களின் கடையவனாக தன்னை மாற்றிக் கண்ட திருத்தூதர் பவுல் பெரிய குடும்ப பின்னணியைக் கொண்டவர், நன்கு கற்றுத் தேர்ந்தவர், கிறிஸ்தவர்களை கொன்றழிக்க புறப்பட்டவர், கிறிஸ்துவால் தடுத்து நிறுத்தப்பட்டவர், கிறிஸ்துவை தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டவர், அதே கிறிஸ்துக்காக தனது உயிரை இழக்க துணிந்தவர்.

தூண்கள் துரும்பாவதும் துரும்பு தூணாவதும் திருத்தூதர்கள் பவுல், பேதுரு வாழ்க்கையில் நடைபெறுவதை நம்மால் காண முடிகிறது. கடவுளின் பார்வையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபாடு கிடையாது, மேலானவர் கீழானவர் என்ற பிரிவினையும் கிடையாது.

தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் தாழ்த்தப்படுவதும், தங்களை தாழ்த்தி கொண்டவர்கள் உயர்த்தப்படுவதும் இயேசுவின் கணக்கு...

இயேசுவை அறியா நிலையிலிருந்து, அறிந்து கொண்ட பிறகு இயேசுவுக்காக தங்களது உயிரை மறைச்சாட்சியாக கொடுக்க முன் வந்த புனித பவுல் பேதுருவைப் போல நாமும் இயேசுவுக்காக, இயேசு விழுமியங்களுக்காக நம்மை இழப்போம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...