24_06

வாழ்வு தரும் தொடுதல்...


பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு 

30.06.2024 - ஞாயிற்றுக் கிழமை

கவலையோடும் கண்ணீரோடும் இருக்கின்ற நபர் அருகில் இருந்து அவருடைய தோள் மீது கை போட்டு அல்லது அவருடைய கரங்களை பற்றிக் கொண்டால் எவ்வளவு பெரிய கவலைகளோடு இருக்கின்ற நபரும் (சிறிதளவாது) ஆறுதல் பெறுவார். தொடுதலுக்கு அவ்வளவு சிறப்பு உண்டு. (அந்த தொடுதலும் கூட சில நேரங்களில் சிலரால் தவறாக மாறிவிடுகிறது- Bad Touch). 

சில தொடுதல்கள் நம்பிக்கை கொடுக்கிறது, ஆறுதலை கொடுக்கிறது, அரவணைப்பை கொடுக்கிறது, துணிச்சலை கொடுக்கிறது...

தொட முடியாத இடத்தில் இருப்பவர்களை கூட உணர்வு தொட்டு விடுவதனால் சில ஆற்றல்களை, சக்திகளை மனிதர்கள் பெறுகிறார்கள். 

எடுத்துக்காட்டாக, ஒரு தாயினுடைய உணர்வின் தொடுதல் வெளிநாட்டில் இருக்கும் மகனை தேற்றுகிறது. இதை எவராலும் மறுக்க முடியாது. கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய இடைவெளி அன்பின் தொடுதலால் குறைந்து போகிறது. 

தானியேல் 10:18 இவ்வாறு சொல்கிறது, "அப்பொழுது, மனிதச் சாயல் கொண்ட அவர் மறுபடியும் என்னைத் தொட்டு வலுவூட்டினார்".

தொடுதலுக்கு வலுவூட்டும் ஆற்றல் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 5:21-43) இயேசுவை ஒரு பெண் தொடுகிறார், 12 ஆண்டுகள் இரத்த போக்கினால் வருந்திய அந்த பெண் நலம் பெறுகிறார், இயேசு ஒரு பெண்ணை (சிறுமியை) தொடுகிறார். இறந்த நிலையில் இருந்து அவர் மீண்டும் உயிர் பெற்று எழுகிறார்.

தொடுதலுக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும்  12 ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணும் சரி, சிறுமியும் சரி தொடக்கத்தில் பேசவில்லை. புதுமை நடந்த பிறகு, உடலில் மாற்றம் ஏற்பட்ட பிறகு தான் பேச ஆரம்பிக்கின்றனர். 

ஆனால் இரண்டு நிகழ்வுகளிலும் இயேசு பேசுகிறார், 1. என் மேலுடையை தொட்டவர் யார் என்ற கேள்வி கேட்பதன் வழியாக, 2. சிறுமி உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு என்று சொல்வதன் வழியாக...

அவர் இறை மகன் ஆற்றல் அவரிடம் இருந்தது என்பதை காட்டிலும், அவரிடம் அன்பு நிறைந்த பார்வை இருந்தது, நலம் தர வேண்டும் என்று எண்ணம் இருந்தது. எனவே தொட்டவர்களும் நலம் பெற்றார்கள் அவர் யாரை தொட்டாரோ அவர்களும் நலம் பெற்றார்கள்.

நாமும் நம்பிக்கையோடு மற்றவரை தொடுகின்ற போது நம்மால் தொடப்பட்டவர் நலம் பெறுவார்...

இயேசுவின் தொடுதலைப் போல நம் தொடுதலும் மற்றவருக்கு வாழ்வு கொடுக்கட்டும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...