24_06

யார் இவர்??? மன நிறைவுள்ளவர்


பொதுக் காலம் 12ஆம் வாரம்

23.06.2024 - ஞாயிற்றுக் கிழமை

“ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார் - லூக்கா 9:20

ஒருவரை சுட்டிக்காட்டி "யார் இவர்?" என்று கேட்கப்படும் கேள்விக்கு பதில் உண்டு. ஆனால் அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். 

பதில் சொல்லும் ஆளைப் பொறுத்து அது அமையும். பிடித்த நபர் என்றால் நேர்மறையான பதிலும் பிடிக்காத நபர் என்றால் எதிர்மறையான பதிலும் வரும். 

பல நன்மையான காரியங்களை செய்பவர்கள் புகழ் விரும்பாமல், மறைத்து எல்லாவற்றையும் செய்வதனால் அவர்கள் அடையாளம் காட்டப்படுவதில்லை. சிறிதளவு நன்மை செய்யக்கூடியவர்கள் தம்பட்டம் அடித்து தங்களை பெருமைப்படுத்தி எல்லாவற்றையும் செய்வதனால் அவர்கள் புகழ் எங்கும் பரவி இருக்கிறது. இப்படிப்பட்ட நபரை குறித்து யார் இவர் என்ற கேள்வியை கேட்டால், "இவரா! இவர் உதவிகள் செய்யக்கூடியவர், தம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுக்கக்கூடியவர்" என்று பதில் வரும்.

நாம் செய்யக்கூடிய செயல்கள் நமக்கு மற்றொருவரிடமிருந்து பாராட்டை பெற்றுக் கொடுப்பதை விட, நாம் செய்யும் செயல்கள் நமக்கு மனநிறைவை கொடுக்க வேண்டும். 

பெருமைக்காகவும் புகழுக்காகவும் செய்யப்படக்கூடிய செயல்களால், மற்றவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் போது நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதே வேளையில் மற்றவர் நம்மை பாராட்ட தவறிவிட்டால் அது ஆழ்ந்த வருத்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். 

நம்மை குறித்து நமக்குள் இருக்கக்கூடிய மன நிறைவு தான் நமக்கு தேவை. 

இயேசு முழு மன நிறைவை பெற்றவர். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4:35-41) இயேசு வெளிப்புற அலைகளினால் தடுமாறாதவராக இருந்தார். காரணம் அவருக்குள் மனம் உறுதியாய் இருந்தது. வெளியே நடக்கக்கூடிய அனைத்தும், தூக்க நிலையில் இருந்தாலும் அவருக்கு தெரியும். ஆனால் அவருடைய சீடர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள் அவர் தூங்கிக் கொண்டிருந்தார் என்று. 

தாங்கள் எழுப்பிய போது தான் அவர் எழுந்தார் என்று எண்ணிக்கொண்ட சீடர்களுக்கு அவர் நம்பிக்கை என்னும் கொடையை பரிசாக கொடுக்கிறார். சீடர்களின் பார்வையில் அவர் உறக்கத்திலிருந்து எழுந்தார்; இயேசுவின் செயல்களினால் அவர்கள் நம்பிக்கை குறைவிலிருந்து நிறைவை பெற்றார்கள்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் வெளிப்புற அலைகள், அடக்குமுறைகள், கொடுமைகள், தாக்குதல்கள் ஒரு ஆட்டத்தை கொடுக்கும். தன்னை கடவுளாக பாவித்து கொள்ளக் கூடியவர்கள் மற்றவர்களை மனிதராக கூட மதிப்பதில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் சிக்கிக் கொள்கின்ற போது பல்வேறு குழப்பமான தருணங்கள் நம்மை நிம்மதியற்ற நிலைக்கு தள்ளிவிடும்.

இயேசுவுக்கும் இத்தகைய காரணிகள் தடங்கல்களாக இருந்திருக்க கூடும். ஆனால், அந்தத் தடங்கல்களை எல்லாம் அவர் தவிடு பொடியாக்கினார். அதனால்தான் காற்றையும் கடலையும் கடிந்து கொண்ட போது மிகுந்த அமைதி உண்டாயிற்று. அப்போது, சீடர்கள் இவரைக் குறித்து "இவர் யாரோ?" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

உட்புற அமைதி இருந்தால், வெளிப்புற சலனங்கள் நம்மை தாக்குவதில்லை. அதற்கு இயேசு ஒரு முன்மாதிரி.

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவை வழி நடத்துபவராக, மன அமைதியோடு உறங்கிக் கொண்டிருப்பவராக, காற்றையும் கடலையும் கடந்து கொள்பவராக, அச்சத்தை போக்குவராக, நம்பிக்கையை மிகுதி படுத்துபவராக படம்பிடித்து காட்டுகிறது. 

இயேசு யார்? என்று நற்செய்தி வாசகம் சுட்டிக்காட்டி விட்டது. 

நாம் யார் என்று நாம் எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறோம். புற காரணிகளால் மன நிறைவு இழந்து நம்மை நாமே சிதைத்து கொண்டிருக்கிறோமா?, அல்லது அக அமைதியினால் புறக் காரணிகளை (இடர்களை) சீர்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

கடவுள் நம்முள் உறைபவராக, கடந்து உள் நிற்பவராக இருக்கிறார். இதை உணர்ந்தால் எத்தகைய இடர், துன்பம், அலைகள் வந்தாலும் தடுமாற்றம் நமக்கில்லை, நாம் யார் என்று நம்மால் அடையாளம் காட்ட முடியும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...