பதுவை நகர் புனித அந்தோனியார்
13.06.2024 - வியாழக் கிழமை
புனித அகுஸ்தினின் சபையில் சேர்ந்து 1219ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
பிரான்சிஸ்கன் சபை துறவிகள் (மொரோக்கோ நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்க சென்று) இயேசுவுக்காக மறைசாட்சியாக கொல்லப்பட்டதைக் கண்டு, தானும் கிறிஸ்துவுக்காக மறைசாட்சியாக வேண்டும் என்று எண்ணி, பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.
அதன்படி இவர் கப்பலில் மொரோக்கோ நாட்டிற்கு பயணமானார்; ஆனால் போகும் வழியில் நோய்வாய்ப்பட்டு நலிவுற்ற நிலைக்குத் தள்ளப்படவே, தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
தனது மறையுரை வாயிலாக பலரை மனமாற்றியவர், கடவுள் தந்த ஆற்றலால் பல புதுமைகளை செய்து பல உயிரை காப்பாற்றியவர், கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையினால் தனது உயிரையும் இழக்க துணிந்தவர், அன்னை மரியா மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர், நற்கருணையில் கடவுள் உண்மையாகவே பிரச்சன்னமாய் இருக்கிறார் என்பதை எடுத்துச் சொன்னவர், மீன்களுக்கு இறை வார்த்தையை போதித்தவர், இறந்தவர்களை உயிர் பெற்றெழ செய்தவர் இத்தகைய பல சிறப்புக்கு உரியவர் புனித அந்தோனியார்.
புனித அந்தோனியார் பல புதுமைகளை அவருடைய வாழ்க்கையில் நிகழ்த்தினார். சொல்லப்போனால், அவருடைய வாழ்க்கையே ஒரு புதுமையாகத் தான் இருந்தது.
புனித அந்தோனியார் இறக்கும்போது அவருடைய வயது 36. அவருடைய உடல் பதுவை நகரில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் இறந்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (1263) இவருடைய உடலை இடமாற்றம் செய்யும் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது.
அப்போது இவருடைய கல்லறை திறந்து பார்த்தபோது இவருடைய நாவு மட்டும் அழியாமல் இருந்தது. இதை பார்த்த பொனவந்தூர், "ஓ தூய நாவே, நீ எப்போதும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்ததால் அழியாமல் காக்கப்பட்டாய்" என்றார்.
யோவான் 14:12இல் இவ்வாறு காண்கிறோம், "நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்".
இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டதனால், இயேசுவைப் போல பல்வேறு வல்ல செயல்களை, புதுமைகளை செய்யும் ஆற்றலை பெற்றவராக புதுமைகளின் ஊற்றாக புனித அந்தோனியார் விளங்குகிறார்.
அடுத்தவருக்கு நாம் செய்யும் அனைத்து நல்ல செயல்களும் புதுமையாக கருதப்படும். அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடிய எண்ணங்கள் அடுத்தவருக்கும் ஆசிர்வாதத்தை கொணரும் நமக்கும் ஆசிர்வாதத்தை கொடுக்கும்.
புனித அந்தோனியாரைப் போல கடவுளில் நம்பிக்கை கொண்டு, மற்றவர் நலனில் அக்கறை கொண்டு, மற்றவர் நிலை உயர உழைப்போம். இச்செயல்கள் வாயிலாக நாம் நிறைஆசிரை பெற்றுக் கொள்வோம்.
நல்ல ஒரு கருத்து தந்தையை உங்களுடைய கருத்துக்களை இப்பொழுது எங்களால் கேட்க முடியவில்லை
ReplyDeleteநன்றி
Delete