"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" - மத்தேயு 11:11
இயேசு, அன்னை கன்னி மரியாள் ஆகியோரைத் தொடர்ந்து திருஅவை வழிபாட்டு ஆண்டில் பிறந்தநாள் கொண்டாடப்படுவது திருமுழுக்கு யோவானுக்கு மட்டும் தான்.
'மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை' (லூக் 7:28) என்று இயேசுவால் புகழாரம் சூட்டப்பட்டவர். லூக்கா நற்செய்தியாளரை (லூக்கா 1:63) பொறுத்தவரை 'இக்குழந்தையின் பெயர் யோவான்!' என்பதை வாய்பேச முடியாத தந்தை செக்கரியா எழுதுபலகை ஒன்றை வாங்கி எழுதுகிறார்.
ஆண்டவர் இயேசு சொல்வது போன்று திருமுழுக்கு யோவான் சாதாரண மனிதர் அல்ல, அவர் மனிதராகப் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 11:11), மற்ற இறைவாக்கினர்கள் தாயின் கருவில் இருக்கும்பொழுது தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்கலாம், ஆனால் திருமுழுக்கு யோவானோ தாயின் கருவில் இருக்கும்போது தூய ஆவியினால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர் (லூக் 1: 41).
மற்ற இறைவாக்கினர்கள் மெசியாவைக் குறித்து முன்னறிவித்தார்கள், ஆனால் திருமுழுக்கு யோவானோ ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தார், அவர் வந்தபோது சுட்டிக்காட்டினார், அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். அதனாலேயே திருமுழுக்கு யோவான் மற்ற எல்லா இறைவாக்கினர்களையும் விட உயர்ந்தவராக இருக்கின்றார்.
திருமுழுக்கு யோவானின் பெற்றோர்களான செக்கரியாவும் எலிசபெத்தும் நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தார்கள். இருந்தபோதிலும், அவர்கள் கடவுளுடைய பார்வையில் நேர்மையுள்ளவர்களாக இருந்தார்கள் (லூக் 1:6), அதனால்தான் கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு குழந்தைப் பேற்றினைத் தருகின்றார்.
புனித திருமுழுக்கு யோவான் மெசியாவிற்கு முன்னோடியாக இருக்கிறார். ஆண்டவருக்காக மக்களைத் தயார்செய்து, அவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டி, அறநெறிக்குப் புறம்பாக வாழ்ந்த ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டி, அவராலேயே கொல்லப்பட்டு இறந்தார்.
திருமுழுக்கு யோவான் விவிலியத்தில் வந்த கடைசி இறைவாக்கினராக இருந்தாலும் அவர் மனிதர்களாய் பிறந்தவர்களுள் உயர்ந்தவராக விளங்குகின்றார்.
இந்நாளின் புனிதர் நமக்கு உணர்த்தும் செய்தி மனிதர்களாய் பிறந்தவர்கள் கடவுளின் பார்வையில் உயர்ந்தவர்கள் தான்.
தாய்க்கு தன் பிள்ளை தவறு செய்தாலும் நல்ல பிள்ளையாகத்தான் தெரியும். ஊரார் தூற்றினாலும் தன் பிள்ளையை ஒருபோதும் தாய் தூற்ற மாட்டார்.
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்றவர் கடவுள். நாம் வாழக்கூடிய வாழ்க்கை நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும்படியாக இருக்க வேண்டும்.
பயன்படா வாழ்க்கை வாழ்வது வீண்.
புனித திருமுழுக்கு யோவான் தன் வாழ்வை தியாகம் செய்து, துறவு வாழ்வு மேற்கொண்டு தன்னையும் தூய்மைப்படுத்திக் கொண்டார், மற்றவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெறவும் உதவினார்.
பண்பட்ட நிலமாக எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள இவர் தன்னை இழந்தார். மனிதராய் இருந்தாலும் மனிதருள் உயர்ந்தவராய் மாறினார்.
கடவுள் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை, கைவிடுவதில்லை. நாம் அவருடைய சாயலை, உருவை பெற்று இருக்கிறோம் என்பதை மனதில் வைத்து அவருடைய உருவுக்கும் சாயலுக்கும் களங்கம் ஏற்படுத்தாமல் மனித மாண்பை உயர்த்தி பிடிப்போம்.
No comments:
Post a Comment