பொதுக்காலம் 10ஆம் ஞாயிறு
09.06.2024 - ஞாயிற்றுக் கிழமை
"உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்" - திருப்பாடல்கள் 25:3
உண்மையை எவராலும் பொய்யாக்க முடியாது. அதே வேளையில், பொய்யை உண்மையாக்க முடியாது. விலை பேசப்பட்டாலும் மிரட்டப்பட்டாலும் உண்மை உண்மைதான், பொய் பொய் தான். வதந்திகளும் மிரட்டல்களும் சில வேளைகளில் உண்மையை விலைக்கு வாங்குவது போல தோன்றுகிறது.
ஆனால் அங்கு உண்மை விலை பேசப்படுவதில்லை, மாறாக உண்மை திரையிட்டு மூடப்படுகிறது.
ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் உண்மையின் பக்கம், பொய்யின் பக்கம் என இரண்டு பக்கம் இருக்கிறது. வெளியில் பெரும்பாலும் படம்பிடித்து காட்டப்படுவது பொய்யின் பக்கம் தான். அது அழகுப் படுத்தப்பட்டதாக மற்றவர்களை கவர்ந்து இழுக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் உண்மையின் பக்கம் கசப்பை கொடுப்பதனால், மற்றவர்களுக்கு எரிச்சலை கொடுப்பதனால் அது மறைத்து வைக்கப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:20-35) இயேசுவுக்கு பேய் பிடித்திருக்கிறது, மதி மயங்கி இருக்கிறான் என்று ஒரு கூட்டம் இயேசுவின் மேல் பொய்யை திணிக்கிறது. ஒருவரை நேரடியாக அளிக்க முடியாவிட்டால் அவரை மறைமுகமாக தாக்க பயன்படும் யுக்திகள் இவைதான் (வதந்தி, பொய்).
(பலரின் வாழ்க்கையில் அவ்வப்போது எழ வேண்டிய கேள்வி, அடுத்தவர் வாழ்க்கையை அழித்து நான் எதை பெரிதாக சாதித்து விடப் போகிறேன்?)
இயேசுவின் நற்பெயரை அழிப்பதற்கான சூழ்ச்சியை மறைநூல் அறிஞர்கள் செய்தார்கள். தங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழும் பெருமையும் இயேசுவை தேடிச் செல்கிற போது, அதை தடுப்பதற்கான வழியை இந்த மறைநூல் அறிஞர்கள் செய்தார்கள்.
தன்னை எதிர்ப்பவர்களை இயேசு எதிர்க்கவில்லை, எதார்த்தத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.
எப்படி சாத்தான் தன்னை எதிர்த்து தானே சதி செய்ய முடியும்? தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து தன் அதிகாரத்தை இழக்க எப்படி சாத்தான் எண்ணுவான்? என்ற கேள்விகளை கேட்கிறார்.
இயேசுவின் ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் இயேசுவின் வல்லமையை உணர்ந்து கொள்ளாதவர்கள் இயேசுவை வீழ்த்த எண்ணுகிறார்கள்.
சதிகாரர்களின் மத்தியில் சாதனை மிக்கவராய் இயேசு துணிச்சலோடு பேசுகிறார்.
ஆனால் அவருடைய பேச்சுக்களை கேட்டவர்கள், அவரை மதி மயங்கியவர் என்று எண்ணினார்கள்.
நம்முடைய வாழ்க்கையில் உண்மைகள் ஓரம் கட்டப்படும் போது, உண்மைக்காக குரல் கொடுப்பவர்கள் கொலை செய்யப்படும் போது பொய் தலைவிரித்து ஆடுகின்றன.
ஆனால், உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.
சில வேளைகளில் எது உண்மை? எது சரி? என்ற சந்தேகம் எழுகிறது. நான் சொல்வது தான் சரி நான் செய்வது தான் சரி என்பது ஒருபோதும் சரியாகாது. (எல்லோருக்கும் தெரியும் நாம் செய்வது அல்லது சொல்வது சரிதானா என்பது).
உண்மையை சரிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, பொய்களை திணிக்காமல் இருந்தாலே உண்மை நிலைத்திருக்கும்.
நமக்கு எதிராக சதி செய்யும் சதிகார கூட்டத்தின் மத்தியில் உண்மையின் பக்கம் நாம் இருந்தால் சதிகாரர்கள் தளர்ந்து போய் விடுவார்கள்.
இயேசுவை எதிர்த்தவர்கள் உண்மையின் பக்கம் இல்லாத காரணத்தினால், அவர்களால் இறுதிவரை இயேசுவோடு போராட முடியவில்லை.
சில வேளைகளில் உண்மையை உண்மை என்று சொல்ல வேண்டி இருக்கிறது ஆனால் பொய்யை உண்மையாக திணிப்பது தவறிலும் தவறு.
இயேசுவின் பக்கம் நாம் இருந்தால், நாம் உண்மைக்கு செவிமடுக்கிறோம்.
No comments:
Post a Comment