பொதுக் காலம் 11ஆம் வாரம்
20.06.2024 - வியாழக் கிழமை
"கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை" - சபை உரையாளர் 5:19
கடவுளை வாயார போற்றி விட்டு, அதே வாயால் மனிதரை தூற்றும் நாவுகள் தான் நம் நாவுகள்.
நல்லது செய்தால் நல்லது விளையும். தீமை செய்தால் தீமை தான் விளையும். (பருவநிலை மாற்றம் போல நல்லது செய்ததற்கு தீமையும், தீமை செய்ததற்கு நல்லதும் விளைவது போல இருக்கிறது). ஆனால் நல்லது செய்யாமல் நல்லதை பெற எண்ணுவது நூல் இல்லாமல் பட்டம் விட எண்ணுவது போலாகும்.
எது எப்படியோ, மன்னிக்க இயலாதவருக்கு மன்னிப்பு கிடைக்காது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:7-15) இறைவேண்டலும் வாழ்க்கை நெறி முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்கிறவற்றையெல்லாம் செய்துவிட்டு, இறைவேண்டல் (புகழ்ச்சியாக, நன்றியாக, விண்ணப்பமாக) செய்வது கடவுளையே இழிவுப் படுத்துவதற்கு சமம். சொற்களை அடுக்கிக் கொண்டே போவதாலோ, வார்த்தை ஜாலங்களை பயன்படுத்துவதாலோ இறைவேண்டல் ஒருபோதும் கேட்கப்படுவதில்லை.
நல்மனமும், நல் வார்த்தைகளும், நற்செயல்களும் இணைகின்ற போது இறைவேண்டல்கள் பலனை கொடுக்கின்றன.
நம்முடைய தேவைகளை கடவுள் அறிந்திருக்கிறார். ஆனால் நம்மோடு இருப்பவர்களை நாம் கண்டு கொண்டிருக்கிறோமா? என்பது கேள்வியே. கண்ணால் காணக்கூடிய மனிதரை அன்பு செய்யாமல் கடவுளை நாம் ஒருபோதும் அன்பு செய்ய முடியாது.
நம்முடைய குற்றங்களை கடவுள் மன்னிக்க, தீமையிலிருந்து நம்மை பாதுகாக்க நாம் இறைவேண்டல் செய்கிறோம்.
ஆனால் மற்றவரின் குற்றங்களை மன்னிக்க, மற்றவர்களை துன்பங்களிலிருந்து பாதுகாக்க நம்முடைய மனம் தயங்குகிறது.
நாம் எதை செய்கிறோமோ (நல்லதோ/கெட்டதோ) அது நமக்கு திருப்பிச் செய்யப்படும்.
வேண்டல்கள் வெறும் வார்த்தைகளாக அல்ல நம் வாழ்க்கையாக மாறட்டும்.
நாம் மற்றவருக்கு செய்யக்கூடிய நன்மைகளை நாம் நம்முடைய இறைவேண்டல் வழியாக கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment