பொதுக்காலம் 10ஆம் வாரம்
12.06.2024 - புதன் கிழமை
"திருச்சட்டம் நல்லது என்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால், அதை முறைப்படி பயன்படுத்த வேண்டும்" -1 திமொத்தேயு 1:8
ஒன்றை அழிப்பது மிக எளிது. ஆனால் ஒன்றை உருவாக்குவது மிக கடினம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:17-19) இறைவாக்கை, திருச்சட்டத்தை நிறைவுற செய்பவராக இயேசு காட்டப்படுகிறார். திருச்சட்டத்திலும் இறைவாக்கு நூல்களிலும் சொல்லப்பட்ட அந்த உண்மைகளை இயேசு தெளிவுபடுத்துகிறார்.
திருச்சட்டத்தின், இறைவாக்குகளின் நோக்கம் கடவுள் மனித அன்பு தான். இதிலிருந்து தவறி சட்டங்களை மட்டும் கையில் தூக்கி பிடிக்கும் அதிகார வர்க்கத்தினரை இயேசு கண்டிக்கிறார்.
சட்டம் மனிதனை கட்டுப்படுத்துவதற்கு அல்ல, மாறாக நல்வழிப்படுத்துவதற்கு. இயேசுவின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அவர் சட்டத்தை மீறுகிறார், இறைவாக்குகளை புறந்தள்ளுகிறார் என்பதுதான்.
அதை அழிப்பவராக அல்ல, அதை முழுமை பெறச் செய்பவராக இயேசு இருந்தார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அவர் சட்டத்தை புதுப்பொலிவுடன் மக்களுக்கு கொடுக்கிறார். (கொலை செய்வது அல்ல, அறிவாளியே, முட்டாளே என்று கூட பேசாதே என்கிறார், விபச்சாரம் அல்ல இச்சையோடு கூட நோக்காதே, ஆணையிடவே வேண்டாம்). இவை தான் சட்டத்தின் முழுமை.
உருவாக்கப்பட்ட ஒன்றை அழிப்பது சிறப்பல்ல மாறாக, உருவாக்கப்பட்ட ஒன்றின் உண்மைத் தன்மை மறைக்கப்படும் போது அதை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் சிறப்பு.
குடும்ப வாழ்க்கையிலும் துறவற வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் ஒருவர் மற்றவர் மீது திணிக்கும் சட்டம் முறையானதா? மற்றவரின் வளர்ச்சிக்குரியதா? என்பது ஆராயப்பட வேண்டும்.
சட்டம் நிறைவேற்றப்படும் இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அது வாழ்வுக்குரிய சட்டமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment