03.06.2024 - திங்கள் கிழமை
ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்" - திருப்பாடல்கள் 103:6
ஏதாவது ஒன்றின் உரிமையாளராய் இருப்பவருக்கும் வாழ்க்கையில் போராட்டம் உண்டு, உரிமையை பெற குரல் கொடுப்போரின் வாழ்க்கையிலும் போராட்டம் உண்டு.
உரிமை குரல் கொடுத்து உயிர் நீத்தவர்கள் ஏராளம். தன்னுடைய உரிமைக்காக மட்டுமல்ல, உரிமை இழந்து இருக்கக்கூடியவர்களின் சார்பாக குரல் எழுப்பி உயிர் விட்டவர்கள் நமக்கு முன் எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:1-12) தோட்ட உரிமையாளர் தோட்டத்தின் உரிமையை பெறுவதற்காக அனுபவித்த துன்பங்கள் கொடுக்கப்படுகின்றன. பணியாளர்கள் கொலை செய்யப்படல், தலைவர் அவமரியாதை செய்யப்படல், இறுதியாக தோட்டத் உரிமையாளர், தன் மகனையும் இழந்து விடுகிறார்.
தன்னுடைய உரிமைகளை தட்டி பறிப்பவர்களை கண்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.
அடுத்தவருக்குரியதை அடுத்தவருக்கு கொடுப்பதும், தனக்குரியதை தான் பெற்றுக்கொள்வதுதான் சமூக நீதியாக இருக்கிறது. ஆனால் இன்றைய சமூகத்தில் ஆளுக்கொரு நீதி இருப்பது ஒரு அவலமாக தான் இருக்கிறது.
அடுத்தவருக்கு உரிய உரிமையை நான் தட்டிப் பறிப்பது, அடுத்தவரின் மாண்பை சிதைப்பதற்கு ஈடாகும்.
இங்கு இந்த தோட்ட உரிமையாளர் நிகழ்வு இறையாட்சியோடு ஒப்பிடப்படுகிறது. தனக்குரிய மக்களை சரிவர வழி நடத்தாத அந்த இறையாட்சி பணியாளர்களை கடவுள் அப்புறப்படுத்துகிறார் அல்லது ஒழித்துக் கட்டுகிறார். (அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களிடம் ஒப்படைப்பார் மாற்கு 12:9)
இறைமக்கள் கடவுளின் உரிமை. இறைமக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து, மக்களை நல்வழிப்படுத்தாத தலைவர்கள் இருந்தும் பயன் இல்லை.
நாமும் தோட்டத்தில் உரிமையாளர்களே. கடவுளின் இறையாட்சி என்னும் தோட்டத்தில் நாமும் உரிமை பெறுகிறோம்.
இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ்ந்து உரிமையை காப்போம்... கடவுளுக்குரியவர்களாய் மாறுவோம்...
No comments:
Post a Comment