பொதுக்காலம் 10 ஆம் வாரம்
10.06.2024 - திங்கட் கிழமை
"இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்" - பாரூக்கு 4:4
நீங்க நல்லா இருக்கணும், கடவுள் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிக்கனும், நீங்க இன்னும் நீடூழி வாழணும் இந்த வார்த்தைகள் எல்லாம் ஆசி பெற்ற வார்த்தைகள் அல்லது பேறுபெற்ற வார்த்தைகள். மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கேற்ற வகையில் நம்முடைய செயல்கள் அமைய வேண்டும்.
இவ்வுலக மனிதரிடமிருந்து புகழ்ச்சியையும் பெருமையையும் தேடுகிறோம். சாதாரண அற்ப மனிதர் தரக்கூடிய புகழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றால், நம்மை உருவாக்கிய, நம்மை செதுக்கிய கடவுள் தரக்கூடிய அந்த புகழ்ச்சி என்பது எத்துனை மேலானது.
சில இழப்புகளை சந்திக்கின்ற போது, சில கைம்மாறை நாம் மிகுதியாக பெற்றுக்கொள்ள முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:1-12) இயேசு 9 வகையான பேறுபெற்றோரை பதிவு செய்கிறார். (ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதியை நிலைநாட்டுவோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர், கடவுளின் பொருட்டு இகழ்ச்சியை துன்பத்தை ஏற்றுக் கொள்வோர்).
இந்த பேறுபெற்றோரில் நாம் எத்தகையோர் என்பதை சிந்திக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் பேறுபெற்றோர் என்ற நிலையில் இருக்கிறோமா? அல்லது இழப்புக்களை, துயரங்களை மற்றவர்களுக்கு கொடுத்து மற்றவர்களை பேறுபெற்றோராக மாற்றிக் கொண்டிருக்கிறோமா! என்பதும் சிந்திக்கத்தக்கது.
கிறிஸ்தவ வாழ்வு மட்டும் துன்பம் நிறைந்தது அல்ல, கிறிஸ்துவில் வாழ்வோருக்கும் துன்பம் உண்டு.
கிறிஸ்துவை சார்ந்தவரை உலகம் வெறுக்கும். ஏனென்றால் கடவுளுக்குரியதை உலகு வெறுக்கும்.
உலகின் பார்வையில் பேறுபெற்றவராக அல்ல, உன்னதரின் பார்வையில் பேறுபெற்றோராய் வாழ்வோம்.
No comments:
Post a Comment