24_06

இயேசுவின் உடலும் இரத்தமும் தியாகத்தின் வெளிப்பாடே...

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா


02.06.2024 - ஞாயிற்றுக் கிழமை

உயிரை கொடுத்து, இரத்தத்தை சிந்தி மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் வெளிவேட (பாசப்) போராட்டம் இவ்வுலகில் அடிக்கடி நடைபெறுகிறது. இது ஒரு புறம். 

நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று, தான் ஒருதலையாக நேசிப்பவர்களை கொலை செய்யும் அட்டூழியங்களும் நிறைவேற தான் செய்கின்றன. இது மற்றொரு புறம். 

இதில் எப்படி பார்த்தாலும் இழப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த இழப்புயெல்லாம் ஒருவர் மற்றவருக்காக அல்லது ஒருவர் தனக்காக செய்யக்கூடியதாக இருக்கிறது.

இத்தகைய இழப்பில் யாருக்கும் பயன் இல்லை. 

இயேசுவின் தியாகமும் (இழப்பு) இந்நிலையில்தான் இருக்குமோ என்ற ஐயம் நமக்கு தேவையில்லை. (அவரின் தியாகம் மாறுபட்டது).

இயேசுவின் இறப்பில் அவருக்கும் இலாபம் இருக்கிறது, அவரைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் இலாபம் இருக்கிறது. (நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒன்றை அல்லது ஒருவரை சார்ந்து இருக்கிறோம் என்றால் அதனால், அவரால் நமக்கு பயன் கிட்ட வேண்டும் அதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு).

இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் இழந்து, மீட்பை பெற்றுக் கொடுத்தார்.

இயேசுவின் தியாகம் என்னும் இழப்பில் மீட்பு என்னும் கொடை இருக்கிறது. 

அன்று இயேசு கொடுத்த அவரது உடலும் சிந்திய அவரது இரத்தமும்,  இன்று அவரை நோக்கி பலரை ஈர்த்திருக்கிறது. அவரைப் பின்பற்றுபவர்களாக, அவரை தங்களுடைய தலைவராக ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது. இது இயேசுவுக்கு இலாபம் தானே.

இறுதி இராவுணவில், தனது உடலை அப்பத்தின் வடிவிலும், தனது இரத்தத்தை திராட்சை இரசத்தின் வடிவிலும் தன்னுடைய சீடர்களுக்கு அவர் கொடுத்தார். இது ஓர் அடையாளம். இழக்க வேண்டும், தியாகம் செய்ய வேண்டும், மீட்பை பெற வேண்டும் என்பதன் அடையாளமாக இயேசுவின் திருவுடலும் திரு இரத்தமும் இருக்கிறது.

இன்று சக மனிதர்களுக்காக நம் உடலை இரத்தத்தை நாம் கொடுக்க வேண்டாம். மற்றவர்களின் உடலையும் இரத்தத்தையும் நாம் அழிக்காமல் இருந்தாலே போதும். 

நம்முடைய எதார்த்த உலகில் நாம் எதையும் இழக்க விரும்புவதில்லை, நமக்காக மற்றவர்கள் இழக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. எதையும் கொண்டு வராத நாம் எதையும் கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்து இருக்கிற நாம் எதையும் இழக்காத வரை மீட்பை பெற்றுக் கொள்ள முடியாது. 

இயேசு ஏற்கனவே சிலுவையில் மீட்பை கொடுத்து விட்டாரே, பின் ஏன் திரும்ப நாம் மீட்பை பெற வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். இயேசு சிலுவையின் வாயிலாக நமக்கு மீட்பை கொடுத்துவிட்டார் அது உண்மைதான். ஆனால் அந்த மீட்பை பெறக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோமா வாழ்கிறோமா? என்பதுதான் கேள்வியாக? இருக்கிறது.

மீட்பை குறித்து திருத்தூதர் பவுலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், "நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்" - உரோமையர் 8:24,25

அவருடைய திருவுடலையும் திரு இரத்தத்தையும் உட்கொண்டு அவரைப் போல தியாகம் நிறைந்தவர்களாக வாழ்கின்ற போது, நாம் எதிர்நோக்கி இருக்கிற மீட்பை அடைந்து விட்டோம். 

தியாகம் இழப்பு இல்லாத வாழ்க்கை விண்ணகம் நோக்கிய வாழ்க்கை ஆகாது.

இயேசு அப்பத்தில் திராட்சை இரசத்தில் தன்னை மறைத்துக் கொண்டார்,

இயேசு மனிதராக தன்னை மாற்றிக் கொண்டார்,

இயேசு துன்பங்களை ஏற்றுக் கொண்டார். இயேசுவைப் போல மாற்றங்களை தேடி வாழ்வில் மீட்பு என்னும் ஏற்றம் பெறுவோம்.

இயேசுவின் தியாகத்தை நம் வாழ்வில் எடுத்துக் காட்டுவோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...