24_06

கடுகும் இறையாட்சியும்... உவமையும் உருவகமும்...

  


பொதுக்காலம் 11 ஆம் ஞாயிறு 

16.06.2024 - ஞாயிற்றுக் கிழமை

புரியும் வகையில் பேசினாலே சில வேளைகளில் நமக்கு புரிவதில்லை. புரியாத ஒன்றை பேசினால் எப்படி புரிந்து கொள்வது?

உவமை, உருவகம் என்பவை அந்த புரிந்துகொள்ள இயலா வரிசையில் தான் வருகின்றன. ஒன்றை பேசும் பொழுது நேரடியான கதாபாத்திரங்களை, நேரடியான ஆட்களை பயன்படுத்துவதற்கு முன், ஒரு பொருளையோ அல்லது ஒரு நிகழ்வையோ சுட்டிக்காட்டி அதன் வழியாக செய்தியை கொடுப்பதாக இந்த உவமை இருக்கிறது.

உருவகப்படுத்தி பேசும் பொழுது, நேரடியாக சில வேளைகளில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த உருவகம் வழியாக ஒன்று உருவகப்படுத்தப்படுகிறது என்பதை நாம் நிச்சயம் புரிந்து கொள்ளலாம்.

சில மறைபொருள்கள் உருவகம் வழியாகவே வெளிக்காட்டப்படுகின்றன. பழைய ஏற்பாட்டில் மனிதர்கள் திராட்சை கொடியோடும் மரங்களோடும் ஆட்டுமந்தையோடும் உருவக படுத்தப்பட்டனர். ஒரு சாதாரண திராட்சைக் கொடிக்கோ, மரத்திற்கோ, ஆட்டுக்கோ அந்த உரிமையாளர் அல்லது ஆயன் தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்யும்போது, எல்லாவற்றையும் படைத்த இறைவன் தனக்குரியவர்களை தனக்குரியவற்றை கைவிட்டு விடுவாரா? 

நிச்சயம் எல்லாவற்றிலும் உறைந்திருக்கும் இறைவன் எல்லாவற்றையும் புத்துணர்வு பெறச் செய்வார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4:26-34) இறையாட்சி கடுகு என்னும் உருவகத்தின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. 

முதலாவதாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லப்படக்கூடிய கடுகு சிறிய விதை, ஆனால் அது முளைத்தெழும் போது எல்லா செடிகளையும் விட பெரிதாகி வானத்து பறவைகள் அதன் நிழலில் தங்கும் அளவுக்கு பெருங்கிளைகள் விடும் என்று சொல்லப்படுகிறது. இதையே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

கடுகு என்பது அளவில் சிறியது, ஆனால் நம்முடைய பகுதி, நம்முடைய நாட்டை பொறுத்தவரை அதனுடைய வளர்ச்சியும் சிறியதாகத் தான் இருக்கும். ஆனால் இஸ்ரயேல் நாட்டில் வளரக்கூடிய இந்த கடுகு என்பது ஒரு பெரிய மரமாக வளர்ச்சியை கொடுத்து மற்றவற்றிற்கு தங்கும் இடத்தையும் கொடுக்கிறது. நம்முடைய பகுதி கடுகு செடியோடு இதை நாம் புரிந்து கொள்ள முடியாது. 

இத்தகைய கடுகு செடியோடு இறையாட்சி ஒப்பிடப்படுகிறது. 

கடுகு என்னும் விதை இறையாட்சியோடு ஒப்பிடப்படுவதற்கு காரணம் மரத்தின் வளர்ச்சி, விரிவாக்கும் இயல்பு, பலன் கொடுக்கும் பண்பு.

அடுத்ததாக, விதைக்கப்பட்ட இந்த சிறிய விதை பரவி, பெரும் பலனை கொடுக்கிறது. 

அதேபோலத்தான் இறையாட்சி என்னும் விதை இயேசுவால் இவ்வுலகில் விதைக்கப்பட்டது. விதைக்கப்பட்ட அந்த விதை இன்று விருட்சமாகி பலன் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அதனுடைய பலனை யாராலும் தடுக்க முடியவில்லை. இன்று உலகம் முழுவதும் இறையாட்சி பரவி கிடக்கிறது, இறையாட்சியின் விழுமியங்கள் சிதறிக் கிடக்கிறது என்பதை நாம் கண்டுணர முடிகிறது.

ஆனால் இறையாட்சியின் மதிப்பீடுகள் வாழ்வாக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே?

திருத்தூதர் பவுலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் "இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது"(உரோமையர் 14:17). 

அப்படிப்பட்ட இறையாட்சியின் விழுமியங்கள் இன்றும் புரியாத புதிராகவே இருக்கின்றனவா அல்லது எங்கும் பரவி இருக்கக்கூடிய இறையாட்சியினுடைய விதைகள் இன்றும் நம்மால் வாழ்வாக்கப்படுகின்றனவா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடுகோடு உருவகப்படுத்தப்பட்ட இறையாட்சி நம் வாழ்க்கையின் வழியாக வெளி காட்டப்பட வேண்டும். நீதி, அமைதி, மகிழ்ச்சி, உண்மை ஆகியவை நம்மில் இருந்து வெளிப்படும்போது நாமும் இறை ஆட்சியின் உருவகங்களே...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...