பொதுக் காலம் 11 ஆம் வாரம்
18.06.2024 - செவ்வாய்க் கிழமை
அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" - உரோமையர் 13:10
தேவைகள், எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் போது நிறைவு கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும்.
என் தேவைகளை மற்றவர்கள் அறிந்து கொள்வதும் மற்றவர்களின் தேவைகளை நான் அறிந்து கொள்வதும் மட்டும் வாழ்க்கைக்கு போதாது. நம்மால் இயன்றதை மற்றவருக்கு செய்ய வேண்டும். அதுதான் நிறைவிலும் நிறைவு கொடுக்கும்.
என்னுடைய தேவைகளை நிறைவு செய்பவரை நான் கண்டுக் கொண்டால் மறுபடியும் அவர் என்னுடைய தேவைகளை நிறைவு செய்வார்.
கொடுத்து திரும்ப வாங்குதல் அல்ல நிறைவு... கொடுப்பதன் வாயிலாக உள்ளத்தில் பெறுவது தான் நிறைவு.
எனக்கு பயன் தராத எனக்கு எதையும் திரும்பச் செய்ய இயலாத நபருக்கு நான் எப்படி ஒன்றை செய்ய முடியும்? என்று கேள்வி நம்மில் எழலாம்.
இயேசுவின் நிறைவு என்பது தன்னைக் கடந்து மற்றவர் நலனில் அக்கறை கொள்வதிலும் மற்றவரை உயர்த்தி விடுவதிலும் தான் இருந்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:43-48) "பகைவரிடம் அன்பு, துன்புறுத்துவோருக்காக இறைவேண்டல்" செய்ய இயேசு சொல்கிறார்.
இது நாம் நிறைவை பெறுவதற்கான ஒரு சோதனை ஓட்டம்.
என்னை துன்புறுத்தக்கூடிய அல்லது என் எதிரியாய் இருக்கக்கூடிய நபருக்கு நான் எப்படி நல்லது செய்ய முடியும்? அவரின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்?
"இறைவன் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழ, மழைப் பெய்ய செய்கிறார்".
இங்கு இறைவன் நல்லோர் மேல் மட்டும் மழையை பொழியச் செய்தார் என்றால் தீமை செய்வோரின் நிலை என்னவாகும்? கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை காரணம் அவரிடம் நிறைவு குடிக் கொண்டிருக்கிறது.
நாம் நன்மை செய்வோருக்கே நன்மை செய்வதனால், அன்பு செலுத்துவோரிடமே அன்பு செலுத்துவதினால் அந்த இடத்திலேயே கைம்மாறை பெற்று விடுகிறோம்.
அதனால் நமக்கான கைம்மாறு விண்ணகத்தில் சேமிக்கப்படுவதில்லை.
நம் விண்ணக தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவராய் இருப்போம். நம்மில் குடிகொள்ளும் நிறைவு ஆள்பார்த்து செயல்படாத, மனதில் வெறுப்பு இல்லாத, சுயநலம் இல்லாத நிறைவாக இருக்கட்டும். எதிர்பாராமல் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்யும் அன்பாக இருக்கட்டும்.
உள்ள(த்)தில் நிறைவுள்ளருக்கு எல்லாம் நிறைவாய் கிடைக்கும்.
No comments:
Post a Comment