பொதுக் காலம் 11ஆம் வாரம்
22.06.2024 - சனிக் கிழமை
"ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது? இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே" - 2 சாமுவேல் 22:32
இன்று அன்புக்குரியவர்களாய் இருப்பவர்கள் நாளை பகைவராய் மாறுவதும், இன்று வெறுப்போடு இருப்பவர்கள் நாளை நண்பர்களாவதும் உண்டு. ஏனென்றால் ஒன்றிலிருந்து ஒன்று மாறிக்கொண்டே இருக்கும்.
நமக்கு ஏற்றார் போல் பேசுபவர்கள் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். நம் பக்கம் உள்ள தவறை சுட்டிக் காட்டுபவர்கள் நமக்கு விரைவில் (நம்மால்) பகைவர்களாய் மாறுவதும் உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:24-34) எவரும் இரு தலைவருக்கு பணிவிடை செய்ய முடியாது, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என கவலை கொள்ளாதீர்கள், கடவுளுடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் (உணவு, தண்ணீர், உடை, நல்வாழ்வு) உங்களுக்குச் சேர்த்து கொடுக்கப்படும் என்கிறார் இயேசு.
இரு தலைவர்கள் = கடவுள்-செல்வம், உண்மை-பொய்மை, நீதி-அநீதி, பிறர் நலம்-தன்னலம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவுதல் இயல்பாக இருக்கிறது. ஏனென்றால் ஒன்றை விட ஒன்று சிறந்ததாக தெரிகிறது. தனக்கு நலம் பயப்பவை தனக்கு மகிழ்ச்சி கொடுப்பவை எப்போதும் தனக்கு சிறந்தது தான்.
ஆனால் இயேசு, கடவுளது ஆட்சியையும், கடவுளுக்கு ஏற்புடையவற்றையும் நாட நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
பல வேளைகளில் வாழ்வில் எழக்கூடிய கவலைகள் நம்மை திசை திருப்பி விடுகின்றன. கடவுளை சார்ந்து இருப்பதினால் என்ன பயன்? கடவுளுக்குரியவற்றை தேடுவதால் என்ன பயன்? என்ற குழப்பத்திற்குள் ஆழ்த்தி விடுகிறது.
நேர்மையின் பக்கம் இருப்பதைவிட தீமையின் பக்கம் இருப்பது எவ்வளவோ நல்லது என்ற மாயையை கொடுத்து விடுகிறது.
எல்லோரும் பொய் பேசுவதனால் பொய் ஒருபோதும் சரியானதாக மாறிவிடாது.
எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கக்கூடிய பகுத்தறிவு நம்மிடமிருக்கிறது.
தற்காலிக மகிழ்ச்சி கொடுப்பதை தேர்ந்தெடுப்பதை விட நிரந்தர மகிழ்ச்சி கொடுக்கும் கடவுளின் அரசை நாம் தேர்ந்து கொள்வோம்.
கடவுளின் அரசை தேர்ந்தெடுப்பதை விட சிறந்தது வேறொன்றுமில்லை...
No comments:
Post a Comment