24_06

விண்ணகத்தில் செல்வம் சேர்க்க...


பொதுக் காலம் 11ஆம் வாரம்

21.06.2024 - வெள்ளிக் கிழமை

நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்ப்போர் தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும் கௌதாரி போன்றோர்; தம் வாழ்நாள்களின் நடுவிலேயே அவர்கள் அச்செல்வத்தை இழந்துவிடுவர்; இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர்" - எரேமியா 17:11

செல்வங்களை சேர்த்து வைக்க எல்லோருக்கும் ஆசை. சிலருக்கு அழியா செல்வத்தை சேர்த்து வைக்க ஆசை. சிலருக்கு பிறரை அழித்தாவது செல்வம் சேர்க்க வேண்டும் என்று ஆசை. 

மண்ணுலகில் நடைபெறும் போட்டி, பொறாமைக்கு அடிப்படை காரணம் பணம், செல்வம், பதவிவெறி. பணத்திற்கு, செல்வத்திற்கு, பதவிக்கு பலமில்லை என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டால் இங்கு மனிதர்கள் மனிதர்களாக வாழ ஆரம்பித்து விடுவார். பிறரின் உரிமையை பறித்து, பிறரின் உயிரைப் பறித்து செல்வம் திரட்டி வைக்க இங்கு திருட்டுக் கூட்டம் உலாவிக் கொண்டிருக்கிறது. 

ஒருவர் தான் சேமித்த செல்வத்தை தன்னுடன் எடுத்துச் செல்வதில்லை என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. சபை உரையாளர் நூல் 2:21 இவ்வாறு சொல்கிறது, "ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே". வெற்று உடம்போடு வந்த நாம், வெறும் கையாக தான் திரும்பிச் செல்ல வேண்டும். 

இதற்கு இடையில் போட்டி பொறாமை, கர்வம், ஆணவம் இன்னும் பல...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:19-23) விண்ணகத்தில் செல்வத்தை சேர்த்து வைக்க இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கிறார். கண் தான் உடலுக்கு விளக்கு கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால் உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும் என்பதை இயேசு தெளிவுற எடுத்துச் சொல்கிறார். 

நம்முடைய கண்ணின் பார்வை தெளிவாக இல்லை என்றால் நம்முடைய எல்லா உறுப்புகளும் செயலிழந்து போய்விடும். சரியான வழிகாட்டுதல் இல்லாத கூட்டம் நிலை தடுமாறுவது போல இருள் அடைந்த கண்ணால் உடல் முழுவதும் இருளுக்குள் மூழ்கி விடும். 

பலரின் கண் இருள் அடைந்து காணப்படுவதால் மண்ணக செல்வங்களின் மீது மோகம் அதிகமாக இருக்கிறது. சேர்த்து சேர்த்து சோர்ந்து போய், களஞ்சியத்தை இடித்து பெரிதாக கட்டத் திட்டமிடுபவர்கள் இங்கு ஏராளம். அறிவற்ற செல்வனுக்குச் சொல்லப்பட்ட வார்த்தை "அறிவிலேயே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" (லூக்கா 12:20) இந்த கேள்விகள் ஒவ்வொரு நாள் இரவிலும் நம்மால் கேட்கப்பட வேண்டும்.

விண்ணக செல்வம் என்பது நல் வாழ்க்கையை குறிக்கிறது. 

கடவுள் விரும்பும் இறையரசுக்கான அந்த பண்புகளை நம்முடைய வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க, நம்முடைய விண்ணக செல்வங்கள் கூடிக்கொண்டே இருக்கும். 

பூச்சியும், துருவும், திருடரும் அழிக்க இயலாத அந்த விண்ணக செல்வத்தை நாம் சேமிக்க தொடங்குவோம். சேமிப்பின் இறுதியில் நமக்கான கைம்மாறை வட்டியோடு பெற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...