24_06

இணைந்து வாழ...


பொதுக்காலம் 10ஆம் வாரம்

14.06.2024 - வெள்ளிக் கிழமை 

"இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்" - தொடக்க நூல் 2:24

திருமணத்திற்கு முன்பும் திருமணத்தின் போதும் திருமணக் காரியங்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன. வெளி ஆடம்பரங்கள், கொண்டாட்டங்கள், சீர்வரிசைகள் என எல்லாம் சிறப்பாக அமைந்துவிடுகிறது. திருமணம் நடைபெறுகின்ற நாள் அல்லது நடைபெற்ற ஒரு சில வாரங்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணம் தொடர்கிறது. 

ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த பின்பு இருவருக்கிடையில் இருந்த மகிழ்ச்சியில் விரிசல் ஏற்படுகிறது. ஒருவரைப் பற்றி அறிவதற்கு முன் இருந்த தேடல், ஆர்வம், மகிழ்ச்சி, அக்கறை ஒருவரைப் பற்றி அறிந்த பின் வீழ்ச்சி அடைகிறது. 

இணைந்து வாழ வேண்டும், கைக் கோர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் ஏன் கைக் கோர்த்தோம்? ஏன் திருமணம் செய்தோம்? என்ற எண்ணத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 

எல்லா மனிதருக்குள்ளும் நிறைகளும் குறைகளும் உண்டு, தடுமாற்றங்கள் தவறுகள் உண்டு என்பதை மனிதன் (கணவன்/மனைவி) ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது.

பல சாட்சிகள் முன்னிலையில் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்தவர்கள், எந்த சாட்சியும் இல்லாமல் பிரிந்து வாழ முற்படுகிறார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:27-32) ஒரு பெண்ணை இச்சையோடு நோக்குபவர் அப்பெண்ணோடு விபச்சாரம் செய்கிறார், பரத்தமைக்காக அன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் மனைவியை விலக்கி விடக்கூடாது என்கிறார் இயேசு.

"கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்று சொல்லப்பட்ட அந்த வாக்குறுதிகள் இக்கால திருமண உறவுகளில் பொய்யாக மாறுகிறது.

சில பிரிவுகளுக்கு சரியான காரணங்கள் கிடையாது (என்னை அவர் அல்லது அவள் மதிக்கவில்லை, என் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை, என்னை மகிழ்ச்சி கொடுக்கவில்லை, என்மீது அக்கறை இல்லை இவைதான் பிரிவிற்கு முன் வைக்கப்படக்கூடிய காரணங்கள்). 

ஒருவேளை இது சரியான காரணங்களாக இருக்கலாம். ஆனால் இதற்கு தீர்வு பிரிவு அல்ல, அமர்ந்து ஒருவருக்கொருவர் மனந்திறந்து பேசுதல் தான் இதற்கான தீர்வு.

அடுத்தவர் மீது அக்கறை(அடுத்தவர் மீது ஆசை) தனக்கானவர் மீதான அக்கறையை சிதைக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்ட/மணமுடிக்கப்பட்ட கணவன்/மனைவியோடு இணைந்து வாழ்வது தான் சரியான வாழ்க்கை.

இறைவன் இணைப்பில் இன்பம் காண வேண்டும். கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் இறுதிவரை புரிதலோடு இணைந்து வாழ வேண்டும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...