பொதுக் காலம் 12ஆம் வாரம்
27.06.2024 - வியாழக் கிழமை
நல்லவை இயேசுவின் பெயரால் நடைபெறுகிறது, கெட்டவை இயேசுவின் பெயரைச் சொல்லி நடைபெறுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:21-29) "என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' என சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்கிறார் இயேசு.
பலர், "ஆண்டவரே, ஆண்டவரே உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உன் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? என்பர். அதற்கு இயேசு உங்களை எனக்கு தெரியவே தெரியாது என்று பதில் சொல்வதாக இறைவார்த்தை பகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
பலர் கடவுளின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்கிறார்கள். ஆனால் அது கடவுளுக்கு ஏற்புடையதா? என்பது அவரவர் மனசாட்சியின் பொருட்டு கேட்கப்பட வேண்டிய கேள்வி...
நாம் செய்கிற எல்லாவற்றையும் செய்து விட்டு கடவுள் விரும்புகிறார், கடவுள் பேசுகிறார், கடவுள் எண்ணுகிறார் என்று சொல்வது பொய் பித்தலாட்டம். அது முற்றிலும் தவறானது.
இன்று தெருவுக்கு தெரு பல கூட்டங்கள் இயேசுவின் பெயரைச் சொல்லி கூடுகின்றன. இயேசு அழைக்கிறார், இயேசு விடுவிக்கிறார் என்று சொல்லி இயேசுவின் பெயரால் பல சுரண்டல்கள் நடைபெறுகின்றன. (இயேசுவின் பெயரால் அங்கு நல்லது நடந்தால் தவறல்ல...)
இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்வது போல், "நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்" என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய நாள் வரும்.
அப்போது இயேசுவின் பணியைச் செய்கிறோம், இயேசுவின் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் துணிந்து/நிமிர்ந்து நிற்க முடியுமா?
கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர் விண்ணரசுக்குள் செல்வர்.
இறைவார்த்தையைக் கேட்டு செயல்படும் (பாறை மீது வீட்டைக் கட்டிய) அறிவாளியாக நாம் இருக்கப் போகிறோமா? அல்லது இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படாத (மணல் மீது வீட்டைக் கட்டிய) அறிவிலியாக இருக்கப் போகிறோமா? என்பது நம் கையில் இருக்கிறது.
இயேசுவின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்வது எளிது. ஆனால் இயேசு விரும்பும் வாழ்க்கை வாழ்வதுதான் இயேசுவுக்கு நாம் பகரும் சான்று.
பத்துக் கட்டளைகளில் 3வது, "கடவுளின் திருப்பெயரை வீணாக சொல்லாதிருப்பாயாக".
தேவை உள்ள இடத்தில் கடவுளின் பெயரைச் சொல்லுவோம். மற்ற இடங்களில் நம் வாழ்க்கையால் கடவுளின் பெயரை மகிமைப்படுத்துவோம்.
No comments:
Post a Comment