பொதுக் காலம் 12ஆம் வாரம்
25.06.2024 - செவ்வாய்க் கிழமை
"அன்பார்ந்தவர்களே, இவ்வாறு நாங்கள் பேசினாலும், உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் மேலான வழியில் நடந்து, மீட்புக்குரியவர்களாய் இருக்கிறீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" - எபிரேயர் 6:9
நம்மை நாம் வருத்திக்கொண்டு, எந்த ஒரு கடினமான செயலையும் செய்ய விரும்புவதில்லை. ஒருவேளை அந்த வருத்தக்கூடிய செயலின் காரணமாக நல்லது நடைபெற்றாலும் கூட எந்த ஒரு வலியையும் வேதனையும் நம்மால் தாங்க முடிவதில்லை.
நமக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்றால் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். விதைப்பதை தானே அறுவடை செய்ய முடியும், விதைக்காத ஒன்றை எதிர்பார்ப்பது நியாயமற்ற செயல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:6,12-14) கடினமான செயல், இடுக்கமான வாயில் பற்றி இயேசு பேசுகிறார். கடினமான செயல் என்பது மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்வது (நமக்கு பிறர் என்ன செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதை மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்).
இடுக்கமான வாயில் என்பது நாம் மீட்பை பெறுவதற்கான கடினமான பாதையை கடந்து செல்வதை குறிக்கிறது(இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; வாழ்வுக்கு செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது, வழியும் மிகக் குறுகலானது).
இடுக்கமான வாயில் பல தியாகங்களை, இடர்களை, துன்பங்களை குறிக்கிறது. அதை கடந்து வந்த பிறகு வெற்றி தான் என்பதை உணர்ந்தால் இடுக்கமான வாயிலை கடப்போம்.
குறுக்கு வழியை கண்டுபிடிப்பவர் பலர். ஆனால் குறுகலான பாதையின் வழியே செல்பவர் சிலர்.
குறுக்கு வழியினால் ஒரு செயல் விரைவாக செய்து முடிக்கப்படும். ஆனால் என்றும் நீடித்த பலனை தராது. ஆனால் குறுகலான பாதை கடப்பதற்கு கடினமானது; இலக்கை சென்று அடைவதற்கு பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கும். ஆனால் இலக்கை அடையும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
இடுக்கமான வாயிலும் கடினமான செயலும் மீட்பு என்னும் வாழ்வை கொடுக்கும்.
நாம் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை நாம் மற்றவருக்கு செய்தால் இங்கு தீமைக்கு இடம் என்பது இல்லை. நமக்கான பாதையில் (அது குறுகலோ இடுக்கமானதோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) நாம் இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நமதே!
நல்லதை செய்து நல்வழியில் நடப்போம்...
No comments:
Post a Comment