பொதுக்காலம் 9ஆம் வாரம்
08.06.2024 - சனிக் கிழமை
"நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது, பட்டினி கிடந்த காலத்தை நினைவில் கொள்; உனது செல்வச் செழிப்பின் காலத்தில், உன் வறுமை, தேவையின் காலத்தை எண்ணிப்பார்" - சீராக் 18:25
சக மனிதர்களை நாம் ஏமாற்றி விடலாம், ஆனால் கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. மனிதர்கள் முன்னிலையில் நல்லவர்கள் என்று நம்மை காட்டிக் கொள்ளலாம், அது நமக்கு ஒருபோதும் முழுமையான நிறைவை தராது.
உட்புறமும் வெளிப்புறமும் இயல்பாக (நடிக்காமல்) இருக்கின்ற போதுதான் நிறைவை நாம் பெற்றுக் கொள்ள முடியும். மத்தேயு 5:6இல் "நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்" என்று காண்கிறோம்.
நிறைவு பல்வேறு வழிகளில் பெறப்படுகிறது. நீதியை நிலைநாட்டும் போது, இருப்பதை பகிரும் போது, தன்னை தாழ்த்தும் போது, பிறரின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் போது நிறைவு நம்மை ஆட்கொள்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:38-44) இரண்டு வகையில் நிறைவு காணக்கூடிய மனிதர்களை நாம் பார்க்கிறோம்.
முதலாவது, ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருப்பதை கொடுப்பதன் வழியாக, உண்மையிலேயே மனநிறைவை பெற்றார். இரண்டாவது, மறைநூல் அறிஞர்கள் மக்களிடமிருந்து எதிர்பார்த்த/பெற்ற பெருமையினால் நிறைவை தேடிக் கொண்டார்கள்.
ஒரு ஏழைக் கைம்பெண் இழப்பதின் வழியாக நிறைவை பெற்றுக் கொள்கிறார் (இயேசுவால் பாராட்டப் பெற்றார்).
மறைநூல் அறிஞர்கள் மக்களிடமிருந்து புகழை பெறுவதன் வழியாக இழப்பை சந்தித்தனர் (இயேசுவால் இவர்களது வாழ்க்கை எச்சரிக்கப்படுகிறது).
நம் வாழ்க்கை நிலையற்ற ஒன்றில் நிறைவை தேடுவதாக உள்ளது. நம் வாழ்க்கையை திரும்பி பார்க்கின்ற போது, புகழை, பெருமையை அடைவதற்காக நாம் ஆடிய ஆட்டங்கள் என்ன? என்ற கேள்வி எழுந்திருக்க கூடும்.
இறைவனின் வார்த்தையில், இறைவனில் நிறைவை காண்போம்... அதன் வழியாக இம்மையில் மகிழ்வும் மறுமையில் கைம்மாறும் பெறுவோம்.
No comments:
Post a Comment