பொதுக் காலம் 12ஆம் வாரம்
26.06.2024 - புதன் கிழமை
முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர். அவ்வாறே உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்; தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்; விரைவில் அழிவைத் தம்மீது வருவித்துக்கொள்வார்கள்" - 2 பேதுரு 2:1
ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சில மனிதர்கள் தெரிந்து ஏமாறுகிறார்கள். சில மனிதர்கள் அறியாமல் ஏமாறுகிறார்கள்.
தெரிந்து ஏமாறுபவர்கள் பலவீனத்தால், பாச பிணைப்பினால் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.
நாம் அறிந்த நபர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் ஏமாறுகிறோம் என்றால், தவறு ஏமாற்றுகிறவர்கள் மேல் இல்லை மாறாக ஏமாறுகிறவர்கள் அதற்கு காரணம். அதற்கு அன்பு ஒரு சாக்கு போக்கு.
நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிக எளிது. ஆனால் தீயவர்களை அவருடைய செயல்களோடு அடையாளம் காண்பது மிக மிகக் கடினம். காரணம் தீமை செய்கிறவர்கள் எளிதாக அகப்பட்டு விட மாட்டார்கள். ஆனால் தீமைக்கும் ஒரு முடிவு உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:15-20) போலி இறைவாக்கினரை குறித்து, நல்ல கனிகொடாத மரங்களை குறித்து இயேசு எச்சரிக்கிறார்.
இயேசுவின் காலத்திலும் பல்வேறு போலி இறைவாக்கினர்கள் மக்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள, தங்கள் நடத்தையால் உண்மை உள்ளவர்களாக இல்லாது இருந்தும், வார்த்தைகளால் மாய வளைக்குள் மக்களை சிக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இயேசு அறிவுறுத்தினார்.
நல்லது செய்கிறவர்கள் நல்லவற்றால் அடையாளப்படுத்தப்படுவார்கள். தீமை செய்கிறவர்கள் தீமையை மறைத்து செய்வதனால், எளிதாக அவர்களை அடையாளம் காண முடியாது.
ஆனால் தீமை செய்கிறவர்கள் கொடுக்கக்கூடிய பலன், தீமையாக தான் இருக்கும். கெட்ட மரம் நல்ல கனிகளை ஒருபோதும் கொடுக்க முடியாது.
'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது போல் போலி வாழ்க்கை வாழக்கூடியவர்கள், போலியான மனநிலை உடையவர்கள் நிச்சயம் தாங்கள் செய்யும் சூழ்ச்சிகளால் கையும் களவுமாக பிடிபட்டு போவார்கள்.
போலி நடத்தை வாழாதவாறு பார்த்துக்கொள்வோம். ஏமாற்றுகிறவர்கள் ஒருநாள் நிச்சயம் ஏமாற்றப்படுவார்கள்.
உண்மையான வாழ்க்கை முறையும் உண்மையான மனநிலையும் நம் வாழ்வை ஒருநாள் உயர்த்தும்.
போலித்தனம் இல்லாத நேரிய வாழ்க்கை வாழ்வது நமக்கான கைம்மாறை நிச்சயம் பெற்றுக் கொடுக்கும்.
No comments:
Post a Comment