பாஸ்கா காலம் 2ஆம் வாரம்
02.05.2025 - வெள்ளிக் கிழமை
இங்கே என் ஆசியால் உணவுப் பொருள் தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்; அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன் - திருப்பாடல்கள் 132:15
உணவு இல்லாமல் உறங்கச் செல்லும் மனிதர்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள். சில நபர்களின் வீட்டில் அடுப்பு எரிவது அபூர்வம் தான். சிலர் தங்கள் கஷ்டத்தை வெளியே காட்டிக் கொள்வது இல்லை.
தன் நிலை கண்டு பிறர் எள்ளி நகையாடி விடக் கூடாது என்பதற்காக தனக்குள்ள கஷ்டத்தை தனக்குள்ளே வைத்துக் கொள்கிறார்கள்.
சில பெற்றோர் தங்களின் வயதான காலத்தில் உணவிற்காக ஒவ்வொரு பிள்ளைகளின் வீடாக ஏறி இறங்குகிறார்கள். உணவு பசியாற்றுவது மட்டுமல்ல உறவை வளர்ப்பது.
முற்காலத்தில் வீடுகளின் முன் இருந்த திண்ணை நமக்கு சுட்டிக் காட்டிய பாடம் உறவு தான். வழிபோக்கருக்காக இரவு சோற்றுப் பானையில் சோறு இருக்கும், காலையில் தான் பானை கழுவப்படும்.
ஆனால் இன்று சொந்த தாய் தந்தைக்கே உணவு கொடுக்காத உறவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:1-15) உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு உணவு கொடுக்கிறார்.
இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.
இவர்கள் அனைவருக்கும் எப்படி கொடுக்க இயலும் என்று தடை போட, மற்றொரு சீடரோ அங்கிருந்த சிறுவனை முன்னிறுத்திகிறார். " இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்ற தயக்கமும் அவரிடம் இருந்தது.
ஒருவர் தடையாக இருந்தார், ஒருவர் தயக்கத்தோடு இருந்தார்.
இயேசுவோ, மக்கள் மீது பரிவுக் கொண்டிருந்தார். எனவே மக்களை அமரச் செய்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அப்பத்தை அனைவருக்கும் பகிர்ந்துக் கொடுத்தார்.
இயேசுவின் பார்வையில் உறவும் முக்கியம் உணர்வும் முக்கியம், அதற்கு ஒரு கருவி தான் உணவு.
ஒவ்வொரு திருப்பலியிலும் இயேசு தன்னை பகிர்ந்துக் கொடுக்கிறார். ஒரே குடும்பமாக நாமும் இவ்விருந்தில் பங்கெடுக்கிறோம்.
உணவு உடலுக்கு மட்டுமல்ல உறவுக்கும் பலம் கொடுக்கும். தேவையில் இருப்போருக்கு தேவையானதை செய்வோம். உறவு பாராட்டுவோம். அதன் வழியாக இயேசுவின் பரிவிரக்கச் செயல்களில் பங்கெடுப்போம்..
No comments:
Post a Comment