28.05.2025 - புதன் கிழமை
எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் - யோவான் நற்செய்தி 17:21
போட்டி, பொறாமை, முன்பகை, அகங்காரம் இவையெல்லாம் தான் மற்றவரை எதிர்க்க தூண்டுகிறது. யார் எதை(நல்லதே) செய்தாலும் அதை எதிர்க்கும் மனநிலை உடையவர்கள் ஒன்றிப்பை விரும்பாதவர்கள்.
மற்றவர்கள் தவறுகின்ற போது அதை எதிர்ப்பவர்கள் வேறு; மற்றவர்கள் எதை செய்தாலும் எதிர்ப்பவர்கள் வேறு.
என்ன கொண்டு வந்தோம், எதை கொண்டு போக போகிறோம் என்ற கேள்வியை அடிக்கடி கேட்டு பார்த்தாலே தேவையற்ற குழப்பம் வராது. இங்கு பிரச்சினையே பிரச்சினையை தூண்டி விடுவது தான்.
கடவுள் பெயரை சொல்லி தான் பல பிரிவினைகள் உண்டாக்கப்படுகின்றன. கடவுளுக்காக என்று சொல்லி சொல்லி கடவுளை கொச்சைப்படுத்தி கொண்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16: 12-15) உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்று சொல்கிறார் இயேசு.
தந்தை மகன் தூய ஆவியாரின் ஒன்றிப்பை நாம் இங்கு காண முடிகிறது. தந்தையிடமிருந்து மகன் பெற்றுக் கொண்டதை தூய ஆவியார் அறிவிக்கிறார். மூவரிடையே கருத்து ஒன்றிப்பு செயல்பாடு ஒன்றிப்பு இருப்பதை காண முடிகிறது.
தந்தை மகன் தூய ஆவி என்று மூன்று ஆட்களாக இருந்தாலும் அவர்கள் இணைந்து செயலாற்றுவதை நாம் காணலாம்.
நாம் வாழும் சமூகத்திலும் பிரிவினைகள் பல உண்டு, அந்த பிரிவினைகளுக்கு மத்தியிலும் ஒன்றிப்பை வலியுறுத்தினோம் என்றால் சமத்துவத்தை உருவாக்கினோம் என்றால் இறை ஆட்சி நம் மத்தியில் தான்.
இன்று குடும்ப உறவுகளில் பிளவு ஏற்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் ஏற்றுக்கொள்ளாமை தான். குறைகளை ஏற்றுக் கொள்கிற போது, பிறரின் இயலாமையை ஏற்றுக் கொள்கிற போது இங்கு ஒற்றுமைக்கு/இணைவதற்கு வாய்ப்பு உண்டு.
No comments:
Post a Comment