பாஸ்கா காலம் 6ஆம் வாரம்
27.05.2025 - செவ்வாய்க் கிழமை
ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன - எசேக்கியேல் 37:1
ஒருவர் போனால் மற்றவர் வருவார். ஒன்று போனால் மற்றொன்று வரும். இது தான் எதார்த்தம். இருப்பது எல்லாம் அப்படியே நிலைத்து விடுவதில்லை. இருப்பது நிலைத்து விட்டால் புதியதற்கு இடமில்லை.
இந்த உலகில் மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், வாழ்க்கை முடிந்ததும் ஆரம்பமான இடத்திற்கே திரும்பி விடுகிறார்கள். யாரும் இங்கு தங்கிவிடுவதில்லை.
ஒன்று போய் மற்றொன்று வருவதை/ ஒருவர் போய் மற்றவர் வருவதை நேர்மையாகவோ எதிர்மறையாகவோ புரிந்துக் கொள்ளலாம். சிலர் நம் வாழ்க்கையில் வரமாய் வருவார்கள், சிலர் சாபமாய் இருப்பார்கள்.
வரமும் சாபமும் நம் செயல்களை/எண்ணங்களை பொறுத்தே மாறும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16: 5-11) இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்".
இங்கு இயேசுவின் புறப்படுதல் திட்டம் தன் சீடர்கள் பயன் அடைவதற்காக. சில நேரங்களில் நம்மோடு இருப்பவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக, திறமை மிக்கவர்களாக இருந்தால் நாம் அவர்களை சார்ந்து மட்டும் இருப்போம். அவர்களை போல் செயல்பட மாட்டோம்.
யாரை நாம் சார்ந்து இருக்கிறோமோ? எதை சார்ந்து இருக்கிறோமோ? அவை நம்மை விட்டு பிரியும் தருணத்தில் தான் நம் ஆற்றல் வெளிப்பட ஆரம்பிக்கும்.
தனித்து விடப்படும் போது தான் நமக்குள் சிறகு இருப்பதை நாம் அடையாளம் கண்டுக் கொள்ள ஆரம்பிப்போம்.
தேக்க நிலை மறையும் போது புதிய பாதை தொடங்கும். புதிய தெளிவு பிறக்கும்.
இயேசு தன் சீடர்களை பிரிந்தது அவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக. நாமும் தேவையற்ற தருணங்களில் தேவையற்ற இடத்தில் இருப்பதை தவிர்ப்போம்.
செயல்பாடு ஒன்றாக இருந்தாலும் பார்க்கப்படும் பார்வை வேறு.
No comments:
Post a Comment