பாஸ்கா காலம் 5ஆம் வாரம்
20.05.2025 - செவ்வாய்க் கிழமை
அவர் நமக்கு மனமகிழ்ச்சியை அளிப்பாராக; இஸ்ரயேலில் முந்திய நாள்களில் இருந்ததுபோல நம் நாள்களிலும் அமைதி நிலவுவதாக. - சீராக்கின் ஞானம் 50:23
இந்த உலகமே அமைதியை விரும்புகிறது. எது அமைதி? என்ற பல பதில்கள் முன்வைக்கப்படலாம். அமைதி என்பது சத்தம் ஏதும் இல்லாமல் இருப்பது, அமைதி என்பது வன்முறை - கலவரம் இல்லாமல் இருப்பது, அமைதி என்பது தியான நிலையில் இருப்பது, அமைதி என்பது சமரசத்தோடு இருப்பது...
ஆனால் இந்த அமைதி வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் இருக்க வேண்டும். வெளிப்புறம் அமைதியாக இருந்து, மனது அலை பாய்ந்துக் கொண்டிருந்தால் நாம் செய்ய நினைக்கும் காரியம் தடைப்படும்.
நம் அமைதியை யார் குலைக்கிறார்? நம் அனுமதியின்றி யாரும் நமது மனதை நிலைகுலைய செய்ய முடியாது. யாரோ? என்றோ? செய்த/சொன்ன காரியங்கள் இன்றும் நம் அமைதியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது.
மனிதர்களால் கொடுக்கப்படுகிற அமைதி மனிதர்களாலே தடைப்பட்டு விடும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14: 27-31b) இயேசு தம் சீடரை நோக்கி, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்" என்று சொல்கிறார்.
உலகம் ஒரு நாள் தூக்கிக் கொண்டாடும், ஒரு நாள் தூக்கி எறியும். மனிதர் புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசுவார்கள். நம் அமைதிக்கான சாவி மனிதரிடம் இருந்தால் நாம் அமைதியை தேடிக் கொண்டு தான் இருக்க வேண்டி இருக்கும்.
பொருளை இழந்தவர்கள் பொருளை தேடுவது சரி, பொருள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
அமைதியை இன்று இழந்து நிற்கிறோம் என்பதை விட அமைதி இல்லாமல் இருக்கிறோம் என்பது தான் உண்மை.
இன்று ஒருவர் நம் அமைதியை தீர்மானிக்கிறார், நாளை மற்றொருவர் தீர்மானிக்கிறார். அமைதிக்கான ஒரே வழி மனிதரிடம் அல்ல கடவுளிடம் தஞ்சம் புகுவது தான்.
மனிதர்களை சார்ந்து வாழ வேண்டும், ஆனால் மனிதர்களை மட்டுமே சார்ந்து வாழ்ந்து விட கூடாது.
உலகம் தீர்ப்பிட காத்திருக்கிறது, ஆனால் அவரோ அமைதியை கொடுக்க காத்திருக்கிறார்.
உலகம் தருகின்ற இன்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு, உன்னதர் தரும் மகிழ்வை/அமைதியை நாடுவோம்...
No comments:
Post a Comment