25_05

பயனற்றது வேண்டாமே!!!


பாஸ்கா காலம் 5ஆம் வாரம்

19.05.2025 - திங்கட்கிழமை 

நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்; முற்றும் பயனற்ற செயல்களே. - சபை உரையாளர் 2:11

பயன் உள்ள வாழ்க்கை எப்படி அடையாளப்படுத்தப்படும்? பிறருக்கும் தனக்கும் பயன் தருவதை நாடுதலே பயன் உள்ள வாழ்க்கை. அதிலும் இரண்டு இருக்கிறது.

1. தன் மனம் விரும்புகிறவற்றை எல்லாம் செய்வது, பேசுவது. (அது தவறாக இருந்தாலும் கூட)

2. சரியானதை மட்டும் செய்வது.

போகிற போக்கில் சிலர் எதையாவது செய்துவிட்டு போய் விடுகிறார்கள். சில நபர்களின் தந்திர செயல்பாட்டினால் பலரின் வாழ்க்கை வீணாகியுள்ளது. தன் மகனுக்காக/மகளுக்காக என்று சொல்லி திருமணத்தில் இணைக்கப்பட்டதை எளிதாக சில தாய் தந்தையர் பிரித்து விடுகின்றனர். 

பேசி தீர்க்க வேண்டிய காரியங்களை பேச விடாமலே தீர்த்து விடுகின்றனர். 

யார் யாரையோ தலைவன் தலைவியாக ஏற்றுக் கொண்டு பலர் திசைமாறி போகின்றனர். 

பயனுள்ள வாழ்க்கை பயனற்றதாய் மாறிக் கொண்டிருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 14: 5-18) லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து உரத்த குரலில், “நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்” என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார்.

இதை கண்ட மக்கள் கூட்டத்தினர் பவுலையும் பர்னபாவையும் தெய்வங்களாக கருதி அவர்களுக்கு காளைகளை பலியிட முயன்றனர். 

இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது: “மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள்" என்று அறிவித்தார்கள்.

பயனுள்ள காரியங்கள் எளிதாக தட்டி கழிக்கப்படும். பயனற்ற காரியங்களோ எளிதாக மக்களால் கவர்ந்து இழுக்கப்படும்.

தலைவர் கட் அவுட் க்கு பால் அபிஷேகம், பணம் பதுக்கல், கொலை மிரட்டல், ஆள் கடத்தல், ஆயுதங்களால் தாக்குதல் என்று பல பயனற்ற காரியங்கள் இங்கு தலைவிரித்து ஆடுகின்றன.

யாரும் யாரையும் திருத்த முடியாது, அவரவர் பட்டு திருந்தினால் தான் உண்டு.

நாம் அழிவைத் தரும் உலக காரியங்களை அளவோடு பயன்படுத்தி விண்ணக கைம்மாறை பெற்றுக் கொடுக்கும் பயனுள்ள காரியங்களை நாடித் தேடுவோம் (இறைவார்தையை வாழ்வாக்க முயற்சி, எளியோரை தாங்குதல், பகிர்ந்து வாழுதல், அன்போடு பழகுதல், ஆணவம், அதிகாரம், பொறாமை ஆகியவற்றை நீக்குதல் இவை தான் கைமாறுக்கு வழிவகை செய்யும்).

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...