25_05

இறுதிநாளில் கைம்மாறு...

பாஸ்கா காலம் 3ஆம் வாரம்

07.05.2025 - புதன் கிழமை 

இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பசி, தாகம் இந்த இரண்டும் தான் வாழ்வின் அடிப்படை தேவை. அதை பெறுவதற்காக தொடங்கப்பட்ட ஓட்டம் இடையில் திசைமாறி விட்டது என்றே சொல்லலாம்.

சொத்துக் குவிப்பு/சேமிப்பு, பணம் பதுக்கல், நிலம் சூறையாடப்படல், அந்நிய நாட்டின் மீது படையெடுப்பு, கலவரத்தை தூண்டி விட்டு பணம் சம்பாதித்தல், மருத்துவத்தில் சீர்கேடு, தண்ணீர், காற்று ஊழல் என்று பிரச்சினைகளின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

எல்லாம் எதற்காக? இம்மையில் நன்றாக வாழ்வதற்காக என்பது பதிலாக வரும். இம்மை வாழ்வில் நமக்கு முழு நிறைவை தரும் எதுவும் இல்லை. இன்று மகிழ்ச்சியை தருவது நாளைக்கு தூக்கியெறியப்படும். 

நிலையானவற்றை தேடிச் சென்று கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6: 35-40) இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.

அந்த நிலைவாழ்வில் தான் நிறைவாழ்வை பெற முடியும். இறைவனில் நம்பிக்கைக் கொள்வோருக்கு என்றுமே பசி, தாகம் இராது என்று சொல்லப்படுகிறது.

பசி, தாகமே இராது என்று சொல்லப்படுகிற போது நிலையற்ற மற்ற காரியங்களை குறித்து கவலை பட எந்த அவசியமும் இராது.

நாம் செய்யக் கூடிய ஒவ்வொன்றின் கைம்மாறை இவ்வுலகிலே தேடிக் கொண்டிருக்கிறோம். கைம்மாறு கிடைக்காத தருணம் வருகிற போது நம் சுயத்தை காட்டி விடுகிறோம்.

நல்லது செய்து பொறுமையுடன் காத்திருத்தலே சிறப்பு. இறுதியில் நமக்காக கைம்மாறு கொடுக்கப்படும். 

சபை உரையாளர் 12:14 இவ்வாறு சொல்கிறது, "நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்."

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...