பாஸ்கா காலம் 5ஆம் வாரம்
22.05.2025 - வியாழக்கிழமை
தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர். - திருப்பாடல்கள் 4:7
எல்லா மனிதரின் எதிர்பார்ப்பும் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான். மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது? யார் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறார்?
மகிழ்ச்சி நமக்குள் இருந்து வருகிறது, ஆனால் அந்த மகிழ்ச்சியை தீர்மானிப்பது நாம் அல்ல, மற்றவர்கள் தான்.
எவ்வளவு வலிமைமிக்க நபராக இருந்தாலும் அவரிடம் ஒரு பலவீனம் (weakness) இருக்கும். தன்னை விட வலிமை குறைந்த ஒரு நபரிடம் நாம் பலவீனப்பட்டு போவார்கள். அதற்கு காரணம் அன்பு தான். (எகா - மகளிடம் தோற்றுப் போகும் தந்தை, காதலி முன் கை கட்டி நிற்கும் காதலன், தன்னை வெறுக்கும் மகனிடம் அன்பைக் காட்ட தவறாத தாய், நண்பனின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்கும் நண்பன்....)
இப்படியாக தன்னை விட ஆற்றல் குறைந்தவரிடம் அடங்கி போகிறார்கள் மனிதர்கள். இதற்கு நீங்களும் நானும் விதி விலக்கு அல்ல...
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15: 9-11) "நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்" என்று சொல்கிறார் இயேசு.
தன்னை சார்ந்தவர்க்கு அன்பினால் அடங்கி போவதில் அன்பு வெளிப்பட வேண்டும். அதிகாரமோ ஆணவமோ சாதிக்காத காரியத்தை அன்பு சாதித்து விடும்.
1 கொரிந்தியர் 13:7 சொல்லப்பட்டுள்ளது, "அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்."
அன்பில் காணப்படும் மன உறுதி மனங்களை மாற்றி விடுகிறது. எத்தனையோ நபர்களை அன்பு மாற்றி இருக்கிறது.
இயேசுவின் பணி வாழ்வு அன்பின் பணி வாழ்வு. இயேசுவின் அன்பின் உச்சக் கட்டம் தன்னை தருதலில் வெளிப்பட்டது. சிலர் பேச்சுக்காக அதை தருகிறேன் இதை தருகிறேன் என்பார்கள், ஆனால் அவர் மட்டும் தான் எல்லோருக்குமாக தன்னையே தந்தார்.
அன்பிலும் இப்போது கலப்படம் வந்து விட்டது. போலியான அன்பும் வலம் வருகிறது. நம்மிடம் இருப்பதை பெற்றுக் கொண்டு நம்மை கெடுக்க நினைக்கும் உறவுகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
நம் அனுமதி இல்லாமல் நம் மகிழ்ச்சியை யாரும் குலைக்க கூடாது/முடியாது.
இறை அன்பும் பிறரன்பும் நம்மில் முழுமை பெறட்டும்... நாமும் மகிழ்ச்சியாய் இருந்து மற்றவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முயல்வோம்...
No comments:
Post a Comment