பாஸ்கா காலம் 3ஆம் வாரம்
05.05.2025 - திங்கட்கிழமை
இந்த உலகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நாம் எதை எதையோ தேடிக் கொண்டிருக்கிறோம். தேடியதை கண்டுப்பிடித்து விட்டாலும் அதில் நம் மனம் நிறைவைக் காண்பதில்லை.
நிறைவில்லாத மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை. சிலருக்கு தேடலில் உடனடி பலன் கிடைக்கிறது, தேடியது ஒன்றும் கிடைக்காததால் சிலர் வாழ்க்கையை நொந்துக் கொள்கிறார்கள்.
நம்முடைய தேடலின் பொருள் நமக்கு புரிந்தால், வெற்றி அருகில் தான். அர்த்தமற்ற தேடல் வீணானது.
இருளில் தொலைத்ததை நாம் வெளிச்சத்திலோ, வெளிச்சத்தில் தொலைத்ததை இருளிலோ தேடிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6: 22-29) நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று இயேசு மக்கள் கூட்டத்தை பார்த்துச் சொல்கிறார்.
உணவுக்காக மட்டும் தேடிய கூட்டம் தற்காலிக மகிழ்வை தேடியது. அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள் என்று இயேசு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
நம் வாழ்வில் தற்காலிக நிறைவை பெற்றால் போதும் என்ற எண்ண ஓட்டம் அதிகம் இருக்கிறது. எதை? யாரை? தேடுகிறோம் என்பதும் எதற்காக? தேடுகிறோம் என்பதும் மிக மிக முக்கியம்.
நமக்குரியதை நாம் தான் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
தேடினால் கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். சரியான பாதையில் தேட வேண்டும். அடுத்தவரை போல குறுக்கு வழியில் அல்ல நேரிய வழியில் நமக்கானதை தேடி கண்டுக் கொள்வோம்.
சரியான புரிதலோடு தேட வேண்டியதை தேடினால் அது நம்மை விட்டு மீண்டும் தொலைந்து போகாது.
No comments:
Post a Comment