பாஸ்கா காலம் 6ஆம் வாரம்
29.05.2025 - வியாழக் கிழமை
“வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு” - திருப்பாடல்கள் 16:11
நாம் விரும்பாத ஒன்று, நம்மை வாட்டி வதைக்க கூடிய ஒன்று - துயரம். அதிகம் சோதிக்கப்படுபவர்கள் நல்லவர்கள் தான். துயரம் இருந்தாலும் பலர் அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை.
மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேட்கப்படும் கேள்விக்கு நம் பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று வரும். மகிழ்ச்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ‘மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று பதில் சொல்வோம். ஆனால் ‘நிறைவான மகிழ்ச்சி’ வார்த்தையால் அல்ல நம் செயல்பாடுகளால் வெளிப்படும்.
“எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்” (1தெசலோனிக்கர் 5:16) இது நம் எதிர்பார்ப்பு. எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க நம் உறவுகள் நம்மை விடுவதில்லை. நெருக்கடிகளுக்கு மத்தியில் எப்படி முழு நேர மகிழ்ச்சி சாத்தியம்?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:16-20) நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்கிறார் இயேசு. ஒரு பிள்ளையை பெற்றெடுக்கும்முன் அந்த தாய் எவ்வளவு பேறுகால வேதனை அடைகிறாள். பிள்ளையை பெற்றெடுத்த பிறகு அந்த வேதனை தணிகிறது. ஒரு உயிர் உலகிற்கு வந்தது குறித்து மிகுந்த (நிறைவான) மகிழ்ச்சி அடைகிறாள் அந்த தாய்.
இறைவன் தரும் மகிழ்ச்சியும் அத்தகையது தான். சிறிது கால துன்பம், அதன் பிறகு நீடித்த மகிழ்ச்சி தான்.
மற்ற மனிதர்கள் முன்னிலையில் நாம் ஏமாற்றப்பட்டது போல தோன்றலாம், நம்முடைய நம்பிக்கை கேள்விக்குறி ஆகலாம்.
எது எப்படி ஆனாலும் இறைவன் தருகின்ற அந்த நிறைவான மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் பிரித்துவிட முடியாது. இறைமகிழ்வில் இணைவோம்… இறைஆசிர் பெறுவோம்.
No comments:
Post a Comment