பாஸ்கா காலம் 3ஆம் வாரம்
08.05.2025 - வியாழக்கிழமை
இயேசுவை அறிந்துக் கொண்டவர்களை விட இயேசுவை அறிந்துக் கொள்ள எண்ணுபவர்கள் தான் அவர்மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
யாரும் இயேசுவை ஏற்றுக் கொள்ளலாம். யாரும் இயேசுவின் படிப்பினைகளை பின்பற்றலாம். இது இயேசுவை வழிபாட்டுப் பொருளாக மட்டும் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை கொடுக்கும்.
ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு "Liturgical Beauty", அதாவது வழிபாட்டு ஒழுங்கு/வழிபாட்டின் நேர்த்தி. இதை இப்படி தான் செய்ய வேண்டும், இது இங்கே தான் இருக்க வேண்டும், இவர்கள் இங்கு வர வேண்டும், இவர்கள் மட்டும் தான் இதை செய்ய வேண்டும் என்று சொல்லி வழிபாட்டிற்கு அழகு சேர்க்க துடிக்கும் கூட்டம் இயேசுவின் போதனையையும், அவர் விதைத்த இறையாட்சியின் விழுமியங்களையும் கண்டுக் கொள்ளாது.
சிலர் நம்பிக்கையோடு கடவுளை தேடி வருவார்கள், சிலர் ஐயத்தோடு கடவுளைத் தேடி வருவார்கள், சிலர் பொழுது போக்கிற்காக கடவுளை தேடுவார்கள், சிலர் பாவ புண்ணிய சேர்க்க கடவுளை தேடுவார்கள்.
நம்பிக்கை தான் மனிதத்தையும் இறைமையையும் இணைக்கின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 8: 26-40) எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர், இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன் என்று சொல்லி திருமுழுக்கு பெறுகிறார். இதற்கு முன்னதாக பிலிப்பு இறைவாக்கினர் எசாயா சுருளேட்டை எடுத்து வாசிக்கிறார். அதன் அர்த்தத்தை அரச அலுவலர் கேட்க, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவிக்கிறார் பிலிப்பு.
ஒருவர் நம்பினார், கிறிஸ்துவில் புதுபிறப்பு அடைந்தார். நம்பினார் புது வாழ்வு பெற்றார்.
நம்பிக்கை தடைகளை உடைக்கும். இன்று அதிகார போக்கிலான ஆன்மீக, அரசியல் பணிகள் நடைபெறுகின்றன. செய்ய வேண்டியவர்கள் அதிகாரத்தை திணிக்கிறார்கள், மற்றவர்களையும் செயல்பட விடுவதில்லை.
கீழானவர்கள் மேலானவர்கள் என்ற பிளவுகள் இயேசுவின் பார்வையில் இல்லை. ஆனால் இயேசுவின் பெயரை சொல்லி இன்றும் பல பிரிவினைகள் இருக்கின்றன.
தடைகளை உடைக்க நம்பிக்கை கொள்வோம். தடைகளை தாண்டி பயணிப்போம்...
No comments:
Post a Comment