புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா
31.05.2025 - சனிக்கிழமை
தனிமையில் வாழ யாரும் விரும்புவதில்லை. சில மனிதர் தந்த காயங்களால் சிலருக்கு தனிமை நிரந்தரமாகிறது. தனிமையாய் இருந்தால் யாருக்கும் எதற்கும் பிரச்சினை இல்லை என்று எண்ணுவோர் உண்டு. ஆனால் தனிமையாய் இருப்பதே இங்கு பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தனிமை பல மனிதர்களை மிருகமாக்கியிருக்கிறது. தனிமை பல மனிதர்களை அழித்திருக்கிறது. பல மனிதர்களை தனித்தீவாக மாற்றியிருக்கிறது.
தேவையில் இருப்போரை சந்திக்க ஒருபோதும் தயக்கம் கொள்ள கூடாது. ஒவ்வொரு கால இடைவெளியும் தனிமையில் இருப்போரை கொன்றுக் கொண்டே இருக்கும்.
கேட்டால் உதவி செய்யலாம், கேட்டால் போய் சந்திக்கலாம் என்ற எண்ணங்கள் நம்முடைய மனிதத்தன்மையை இழக்க செய்கிறது. உண்மையிலே தேவையில் இருப்போர் யாரிடமும் கேட்க கூச்சப்படுவார்கள், மற்றவர்கள் எண்ண நினைப்பார்களோ என்று தயங்குவார்கள். தேவையில் இருப்போரை நாம் தான் கண்டுக் கொள்ள வேண்டும், சந்திக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-56) மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு (ஜயின் கரீம்) விரைந்து சென்றார் என்று வாசிக்கிறோம். எதற்காக அன்னை மரியா விரைந்து சென்றார்? இரண்டு காரணங்கள் 1. எலிசபெத்தை சந்திக்க 2. அவருக்கு உதவி செய்ய
இந்த சந்திக்க வேண்டும் என்ற இரக்கக்குணம் இருக்கும் காரணத்தால் தான் அன்னை மரியா விரைந்து சென்றார்.
கண்டார், நம்பினார், தங்கினார், உதவினார் அன்னை மரியா.
இந்த சந்திப்பில் தூய ஆவியாரின் குறுக்கீடு இருப்பதை காண்கிறோம். எலிசபெத்து தூயஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு எலிசபெத்தை வாழ்த்துகிறார். இரண்டு தாய்மார்கள் மட்டுமல்ல இரண்டு சேய்களும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
சந்திப்போடு மட்டும் முடிவடையவில்லை இந்த பயணம் புரட்சி பாடலாகவும் தொடர்கிறது.
அன்னை மரியாவின் சந்திப்பு எலிசபெத்தின் சங்கடத்தை தீர்த்து மகிழ்ச்சியை கொடுத்தது போல நம் சந்திப்பும் நலம் இழந்தவர்களுக்கு நலத்தை, நம்பிக்கை இழந்தவர்களுக்கு புதுவாழ்வையும் கொடுக்கட்டும்…
No comments:
Post a Comment