பாஸ்கா காலம் 5ஆம் வாரம்
23.05.2025 - வெள்ளிக் கிழமை
"மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்" - ஒசேயா 2:20
அன்பு இருக்கும் இடத்தில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பே கடைசியில் ஆபத்தில் போய் முடியும். அதிக அன்பு செலுத்துவோர் கடைசியில் ஏமாளியாக தான் பார்க்கப்படுகிறார்கள். அளவுக்கு மீறிய அன்பும் ஆபத்தானது.
எல்லை மீறி செல்கின்ற அன்பு இறுதியில் எதையும் செய்ய துணிந்து விடுகிறது. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது.
இன்று அன்பில் போட்டியும் பொறாமையும் உள்ளது. யாருடைய அன்பு பெரியது? யார் அன்பு சிறந்தது? என்ற போட்டியில் அன்பு அதன் தன்மை இழந்து நிற்கிறது.
மகனின் அன்பை இழந்து விடக் கூடாது என்று தாயும் கணவனின் அன்பை இழந்து விடக் கூடாது என்று மனைவியும் போட்டி போட்டு அன்பை சிதைத்து விடுகின்றனர்.
யாருடைய அன்பும் சிறந்தது அல்ல, அன்பே சிறந்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15: 12-17) "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்" என்கிறார் இயேசு.
அன்பு இருக்கும் இடத்தில் பொறுமைக்கு இடம் உண்டு, தாழ்ச்சிக்கு இடம் உண்டு, இரக்கத்திற்கு இடம் உண்டு, இறைவனுக்கு இடம் உண்டு.
அன்பு எங்கு பணத்திற்காக காட்டிக் கொடுக்கப்படுகிறதோ அங்கு அன்பு தன் சிறப்பை இழந்து போய் விடுகிறது.
இன்று ஒருவர் மற்றவர் மீது கொண்ட அதீத அன்பினால் ஒருவர் மற்றவரை கொலை செய்யும் அளவுக்கு போய் விடுகின்றனர். அன்பிற்கு பணிவு தேவை.
நான் காட்டும் அன்பு திருப்பி காட்டப்பட வேண்டும் என்றோ என் அன்பை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றோ யாரும் எதிர்பார்க்க கூடாது.
எங்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அங்கு ஏமாற்றத்துக்கு இடம் உண்டு.
நம் அன்பை மற்றவர்கள் பெறட்டும்... இடம் கொடுக்கப்பட்டால் மற்றவர் அன்பில் நாம் இணைவோம்...
No comments:
Post a Comment