பாஸ்கா காலம் 3ஆம் வாரம்
04.05.2025 - ஞாயிற்றுக் கிழமை
“இயேசு அவரை நோக்கி, கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல என்றார்” - லூக்கா 9:62
திரும்பிப் பார்க்கிறவர் தகுதியுள்ளவர் அல்ல என்ற சொல் துறவற வாழ்வுக்கு மட்டுமல்ல, இல்லற வாழ்வுக்கு பொருந்தும். துறவற நிலை, திருமண நிலை இரண்டும் இறைவனின் பணியை தொடர்ந்து ஆற்றுவதற்கான பணித்தளங்களே. கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசுவே கூறியிருக்கிறார்.
இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் என்னும் கலப்பையை பிடித்தவர்கள் திருமணப்பந்தத்தை இறுதிவரை காப்பாற்றிக் கொள்ளமுடியா நிலையில் இருக்கிறார்கள். கோபம், ஆணவம், செருக்கு, தலைக்கணம் மற்றொருவரை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்கிறது. பேசப்பட்ட ஒரு வார்த்தைக்காக விவாகரத்து என்ற நிலைக்கு வந்தவர்களும் உண்டு. கடவுள் கொடுத்த வாழ்வை சிறு பிரச்சினைக்காக அழித்தவர்களும், அழிக்க காரணமாய் இருந்தவர்களும் உண்டு.
அதேபோல துறவற வாழ்வில், கிறிஸ்து கொடுத்த அழைப்பையும் மேன்மையையும் இழந்தவர்களும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தகுதியற்றவர்களாய் மாறியதும் உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:1-19) இயேசுவின் சீடர்களுக்கும் அதே நிலை தான் ஏற்பட்டது. இயேசுவோடு இருந்தவர்கள், இயேசுவின் இறப்பிற்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எண்ணுகிறார்கள். பேதுரு மற்ற சீடர்களிடம், ‘நான் மீன்பிடிக்கப் போகிறேன்’ என்றார், உடனே மற்ற சீடர்களும் ‘நாங்களும் உம்மோடு வருகிறோம்’ என்று சொல்லி படகில் ஏறினார்கள். சீடர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மறந்து விட்டனர், தாங்கள் சான்று பகர வேண்டும் என்பதை மறுத்து விட்டனர். நற்செய்தி பதிவு செய்கிறது, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு மூன்றாம் முறையாகத் தம் சீடர்களுக்கு தோன்றினார்.
இத்தனை காட்சிகள் கொடுத்தும் அவர்கள் உறுதிப்படவில்லை. முன்னோக்கி செல்ல வேண்டியவர்கள், நிலைதடுமாறி பின்னோக்கி பார்க்க ஆரம்பித்தனர்.
முன்னோக்கி செல்ல வேண்டிய குடும்ப வாழ்க்கை இன்று பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. திருமணத்திலும் துறவறத்திலும் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன.
நம் நிலை என்ன? கலப்பையில் வைத்திருக்கின்ற நமது கை, கடவுளின் பணியை நிறைவு செய்கின்றவரை எடுக்கப்படாமல் இருக்கின்றதா? என்பதை சிந்திப்போம்.
பேதுரு தடுமாறினவர் தான், ஆனால் மீண்டும் அழைப்புக் கொடுக்கப்பட்ட போது அழைப்பில் உறுதியாய் இருந்தார்.
என் ஆடுகளை பேணி வளர் என்ற சொல்லுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார் என்பதை இன்றைய முதல் வாசகம் தெளிவுப்படுத்துகிறது. இயேசுவைக் குறித்து அறிவிக்க கூடாது என்று சொல்லப்பட்ட போதிலும் துணிச்சலோடு இயேசுவை பற்றி அறிவித்தார்கள்.
பெற்றுக் கொண்ட அழைப்புக்கு சான்று பகர்ந்தார்கள்.
நாமும் அழைப்பின் மேன்மையை அழித்துவிடாமல்\இழந்து விடாமல் காப்போம்.
No comments:
Post a Comment