25_05

ஆயனுக்கு செவிமடுக்க...


பாஸ்கா காலம் 4ஆம் வாரம்

12.05.2025 - திங்கள் கிழமை

“அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்” - திருப்பாடல்கள் 116:2

வம்பை விலைக் கொடுத்து வாங்குவது போல தேவையில்லாத உறவுகளை, உணர்வை கொடுத்து வாங்கி விடுகிறோம். உணர்வினால் ஒருமுறை கட்டப்பட்டால் அதன்பின் மீண்டு வருவது கடினம் தான். ஒருவருக்கு அடிமையாகிவிட்டால் அவர் ஆட்டி வைப்பது போல தான் நாம் இயங்குவோம். அடிமைத்தனம் ஆபத்தானது. அலைபேசி அடிமை, உணர்வின் அடிமை, உணவுக்கு அடிமை, நுகர்வுவெறிக்கு அடிமை என்று அடிமைத்தனம் நீண்டுக் கொண்டே செல்கிறது.

இந்த அடிமைத்தனம் உள்ளே நுழைந்தால், மற்ற நல்லவை காதின் உள்ளே நுழையாது. இன்று பெற்றோருக்கோ, மூத்தோருக்கோ செவிமடுக்க முடியாதவாறு காதுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:1-10) ஆயன், ஆடு செவிமடுக்கும் நிலை விவரிக்கப்பட்டுள்ளது. ஆயன் ஆட்டை அறிந்திருக்கிறார், ஆயனை ஆடுகள் அறிந்திருக்கின்றன, அவற்றிற்கு அவரது குரல் தெரியும், அறியாத ஒருவர் பின் அந்த ஆடுகள் செல்லாது என்கிறார் இயேசு கிறிஸ்து. 

நம்முடைய நல்வாழ்வை சிதைக்க பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்படுவது தெரிந்தும் திசைமாறி செல்வது முறையல்ல. ஆயனின் பார்வையிலிருந்து விலகி போக கூடாது. ஆயனுக்கு செவிமடுக்கின்ற போது நாம் நிலைதடுமாற மாட்டோம். ஆயனுக்கு ஆடுகளின் நிலை தெரியும், ஆடுகளின் பலவீனம் தெரியும், ஆடுகளின் களைப்பு தெரியும்.

நம்முடைய வேலை என்பது காதுகளை திறந்து செவிமடுக்க வெண்டும். செவிமடுத்தால் மட்டும் போதாது செவிசாய்க்க வேண்டும். கேட்பவற்றை செயல்படுத்த வேண்டும். 

இவ்வுலக வாழ்வை நாம் நிறைவாக பெற்றிட ஆயன் வழியில் நடப்போம். அடிமைத்தனத்துக்கு அல்ல ஆயனுக்கு செவிமடுப்போம். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...